கப்பலேறிய மானம்! அமெரிக்க வங்கியில் காப்பீட்டு ஆவணத்தில் ₹950 கோடி? மகேந்தர் மகிஜனி சிக்கியது எப்படி
நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர், அங்குள்ள முன்னணி வங்கியில் சுமார் 950 கோடி ரூபாய் அளவிற்கு மெகா நிதி மோசடியில் ஈடுபட்ட விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவரை அமெரிக்க பாதுகாப்புப் படையினர் நள்ளிரவில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்... நிஜமாகவே என்னதான் நடந்தது?
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார் 44 வயதான மகேந்தர் மகிஜானி.. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், அங்குள்ள ஒரு பிரபல வங்கியில் இருந்து சுமார் 100 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 950 கோடி ரூபாயை மிகவும் திட்டமிட்டு சுருட்டி விட்டாராம்

இந்தியா வம்சாவளி
இந்த மெகா ஊழலை அரங்கேற்றுவதற்காக அவர் கையாண்ட உத்திகள் தான், இப்போது வங்கித் துறையினரையே அதிர வைக்கும் வகையில் அமைந்துள்ளன.
மகேந்தர் மகிஜானி தனது பெயரிலும், தனக்கு நெருக்கமானவர்களின் பெயரிலும் பல்வேறு போலி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தியுள்ளார். அந்த நிறுவனங்களின் பெயர்களில், எந்த உண்மைத்தன்மையும் இல்லாத முற்றிலும் போலியான காப்பீட்டுப் பத்திரங்களைத் தயாரித்துள்ளார்.
போலி - அசல் ஆவணங்கள்
இந்த போலி ஆவணங்களை வங்கியிடம் அசல் ஆவணங்கள் போல காட்டி, அவற்றின் அடிப்படையில் கோடிக்கணக்கான ரூபாயை அடுத்தடுத்து கடனாகப் பெற்று ஏமாற்றியுள்ளார். ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சம் தொகையாகத் தொடங்கி உள்ளார். பிறகு வங்கியின் கண்காணிப்பு வளையத்திற்குள் வராதபடி பல தவணைகளாக இந்த பிரம்மாண்ட தொகையை அவர் தனது கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.
வங்கி அதிகாரிகள் சில சமயங்களில் இந்த கடன்கள் மற்றும் கணக்கு விபரங்கள் குறித்து அவரிடம் சந்தேகம் எழுப்பிய போதெல்லாம், தனது சாதுரியமான பேச்சால் தொடர்ந்து பொய்களைக் கூறி மழுப்பியே வந்தாராம்.
பணப் பரிவர்த்தனை
ஒரு கட்டத்தில் மிக நேர்த்தியாக போலியாக வடிவமைக்கப்பட்ட ஆவணங்களை காட்டி அதிகாரிகளை நம்பவும் வைத்துள்ளார். எனினும், ஒரு கட்டத்தில் இவரது நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைகளில் பெரும் முரண்பாடுகள் இருப்பதை வங்கியின் உயர் மட்டக் தணிக்கைக் குழுவினர் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளுக்கு ரகசியமாக விஷயத்தை சொல்லி உள்ளார்கள்.. உடனே அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் மகேந்தர் மகிஜானியின் சர்வதேச மற்றும் உள்நாட்டு ரகசியப் பணப் பரிவர்த்தனைகளை தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினர். அவரின் வங்கி கணக்குகள், போலி நிறுவனங்களின் முகவரிகள் மற்றும் அவர் பணத்தை எங்கெல்லாம் மாற்றினார் என்பது குறித்த டிஜிட்டல் தடயங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.
சுற்றி வளைந்து கைது
அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து, தப்பியோட முயன்ற மகேந்தர் மகிஜானியை அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள் மொத்தமாக அதிரடியாக சூழ்ந்து கைது செய்தனர். சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த மெகா நிதி மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கோர்ட்டில் முழுமையாக நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அமெரிக்க சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கின் பின்னணியில் வங்கியைச் சேர்ந்த வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications