என்னுடைய ஆசிரம சொத்துகளை தீய சக்திகள் அபகரிக்க முயற்சி செய்யுறாங்க.. நித்யானந்தா பகீர்
நியூயார்க்: தனது ஆசிரம சொத்துகளை தீய சக்திகள் அபகரிக்க முயற்சிப்பதாக, சாமியார் நித்தியானந்தா குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியாவில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ள நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ளன. அவரை குஜராத் மற்றும் கர்நாடகா காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
இந்நிலையில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட நித்யானந்தா, எந்த நாட்டில் வசிக்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை.
அமெரிக்கா அருகே
கடைசியாக நித்யானந்தா ஈக்வடார் நாட்டில் தங்கியிருந்தார். அதன்பிறகு ஹைதி தீவுக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்ற நித்யானந்தா அமெரிக்காவுக்கு அருகே ஏதோ ஒரு தீவில் இருப்பதாக சொல்கிறார்கள்.
சத்சங்கம்
இந்நிலையில் நித்யானந்தாவை இண்டர்போல் உதவியுடன் பிடிக்க போலீசார் தீவிரமாக முயன்று வருகிறார்கள். அதேநேரம் நித்யானந்தா தன்னை சுற்றி பற்றி நடப்பவை பற்றி கவலைப்படாமல் தினமும் சத்சங்கம் மூலம், சொற்பொழிவு ஆற்றி வருகிறார். தன் மீதான குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார்.
1200 இடங்களில சொத்துக்கள்
இந்நிலையில் நேற்றிரவு ஆற்றிய உரையில், தீய சக்திகள் தன்னிடம் உள்ள சொத்துக்களை திருடி விட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்தார். இந்தியா முழுவதும் தனக்கு சொந்தமான 1,200 இடங்களில் உள்ள சொத்துகளை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும், அது குறித்து முழுவிவரங்களை இப்போதைக்கு வெளியில் கூற முடியாது என்றும் கூறினார்.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் உள்ள கோயிலின் மூலவர் லிங்கம் தன்னிடம் இல்லை என்று கூறிய நித்யானந்தா, முந்தைய பிறவியில் அங்கு ஏற்படுத்தி இருந்த மூல லிங்கம் எனப்படும் ஞான சக்தி தான் தன்னிடம் உள்ளதாகவும் கூறினார்.