விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! எலான் மஸ்குக்கு அதிரடி உத்தரவு போட்ட டிரம்ப்! குட் நியூஸ்
நியூயார்க்: சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸை, முடிந்த அளவுக்கு சீக்கிரமாக பூமிக்கு திரும்ப அழைத்து வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்க்கிடம் வலியுறுத்தியுள்ளார்.
விண்வெளி துறையில் பிரைவேட் நிறுவனங்களை ஈடுபடுத்த அமெரிக்கா நீண்ட காலத்திற்கு முன்பே முடிவெடுத்திருந்தது. ஆனால், அப்போது முதல் இப்போது வரை, எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் கை மட்டுமே இந்த துறையில் ஓங்கி வந்திருந்தது. எலான் மஸ்க்குக்கு போட்டியாக வந்ததுதான் 'போயிங்' நிறுவனம்.

விமானங்கள் தயாரிப்பில் நீண்ட அனுபவம் கொண்ட இந்த நிறுவனம், மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப 'ஸ்டார்லைனர்' எனும் விண்கலத்தை ரெடி செய்திருந்தது. அதில்தான் இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த புட்ச் வில்மோர் ஆகியோர் பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தனர்.
இவர்கள் புறப்படுவதற்கு முன்னரே, பலமுறை தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஸ்டார்லைனர் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. ஒருவழியாக ஜூன் மாதம் அவர்கள் விண்வெளிக்கு புறப்பட்டார்கள். 10 நாட்கள் விண்வெளியில் தங்குவது, ஆய்வு செய்து முடித்துவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவதுதான் பிளான்.
ஆனால் அங்கு போன பிறகுதான் ஸ்டார்லைனர் ராக்கெட்டில் பெரிய பிரச்சனை இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ராக்கெட் பூமிக்கு பத்திரமாக வரவேண்டும் எனில், த்ரஸ்டர் எனும் அமைப்பு முக்கியம். ஸ்டார்லைனரில் மொத்தம் 12 monopropellant RCS த்ரஸ்டர்கள் இருந்தன. இதில் 5 த்ரஸ்டர்கள் வேலை செய்யவில்லை. விண்வெளிக்கு போனதிலிருந்து இதை சரி செய்ய, சுனிதாவும், வில்மோரும் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் சரியாகவில்லை.
பின்னர் வேறு வழியின்றி, ஸ்டார்லைனர் ஆட்கள் இல்லாமல் பூமிக்கு திரும்பியது. தற்போது விண்வெளியில் சுனிதாவும், வில்மோரும் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும். இதற்காக எலான் மஸ்க்கிடம் அப்போது அதிபராக இருந்த பைடன் உதவி கேட்டிருந்தார். அவர் கேட்டதன் அடிப்படையில் 'க்ரூ டிராகன்' எனும் ராக்கெட்டை எலான் மஸ்க் ரெடி செய்து அனுப்ப திட்டமிட்டிருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப முடியவில்லை. இருப்பினும் நீண்ட தாமதம் இல்லாமல் செப்.28ம் தேதி அது விண்வெளிக்கு சென்றது.
சரி அப்புறம் என்னப்பா.. ராக்கெட் அனுப்பியாச்சு! சுனிதாவை கூப்பிட்டுடலாமே.. என எல்லோரும் கேள்வி கேட்டார்கள். ஆனால் இங்குதான் ட்விஸ்ட் இருக்கு. அதாவது ராக்கெட்டை நினைத்த நேரத்துக்கு அங்கிருந்து கூப்பிட முடியாது. எனவே சுனிதா பூமிக்கு பிப்ரவரி மாதம் திரும்புவார் என அறிவிக்கப்பட்டது.
இப்படி இருக்கையில், முடிந்தவரை சீக்கிரமாக சுனிதாவையும், புட்ச் வில்மோரையும் அழைத்துவர வேண்டும் என்று டிரம்ப் கேட்டுக்கொண்டதாக, எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். x தளத்தில் இதனை பகிர்ந்துக்கொண்ட அவர், முடிந்தவரை சீக்கிரமாக அழைத்து வருவேன் என்று டிரம்புக்கு பதில் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications