அமெரிக்க ராணுவத்தில் இருந்த கறுப்பின அதிகாரி அதிரடி நீக்கம்! வேலையை காட்ட தொடங்கிய டிரம்ப்!
நியூயார்க்: பன்முகத்தன்மை மற்றும் சமத்துவம் குறித்து பேசியதற்காக அமெரிக்க ராணுவத்தின் விமானப்படை ஜெனரலாக இருந்த சார்லஸ் கியூ பிரவுன் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
டிரம்ப்பின் இந்த நடவடிக்கை சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், பன்முகத்தன்மையை விரும்புவதும், வலியுறுத்துவதும் அவ்வளவு பெரிய குற்றமாக சித்தரித்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் முதலை, மிகப்பெரிய பணக்காரர், அதைவிட முக்கியம் தீவிர வலதுசாரி என அறியப்படுபவர்தான் டிரம்ப். இதற்கு அடுத்துதான் அதிபர் பதவியெல்லாம். அவர் கடந்த முறை அதிபரானபோது, என்ன செய்ய போகிறார்? எப்போது என்ன முடிவு எடுப்பார் என்பது யாருக்குமே தெரியாமல் இருந்தது. அதையேதான் இந்த முறை அதிபரானபோதும் செய்து வருகிறார். அவர் அதிபரானது பற்றி மற்ற நாடுகள் கவலைப்படுவதைவிட, அமெரிக்க அரசு அதிகாரிகள்தான் அதிக கவலை கொண்டிருக்கின்றனர்.
எது நடக்கக்கூடாது என்று நினைத்தார்களோ அது தற்போது நடந்து வருகிறது. அதாவது ராணுவத்தில் உயர் பதவியில் உள்ள ஒவ்வொரு முக்கிய நபரையும் டார்கெட் செய்து தூக்கி வருகிறார். இந்த ஸ்கெட்ச்சில் சிக்கிய முதல் பலியாடுதான் சார்லஸ் கியூ பிரவுன். அமெரிக்க ராணுவத்தின் கூட்டு பணியாளர்களின் தலைவர் ஜெனரலாக இவர் பதவி வகித்து வந்திருக்கிறார். இந்த பதவியை வகித்த இரண்டாவது கறுப்பின நபர் இவர்தான். நேற்றிரவு இவரை டிரம்ப் டிஸ்மிஸ் செய்திருக்கிறார்.
"ஜெனரல் சார்லஸ் கியூ பிரவுன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் இந்த நாட்டிற்கு சேவையாற்றியிருக்கிறார். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்லாது சிறந்த மனிதரும் கூட. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்" என்று தனது சோஷியல் மீடியாவில் டிரம்ப் பதிவிட்டிருக்கிறார்.
இது அமெரிக்க ராணுவத்திற்குள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்றதையெல்லாம் பண்ணிவிட்டு, தலைவர், மனிதர்னு டிரம்ப் பாராட்டி தள்ளியிருப்பதை ராணுவத்தினர் அவ்வளவாக ரசிக்கவில்லை.
பிரவுனின் பொறுப்புககு ஓய்வுபெற்ற விமானப்படை லெப்டினன்ட் ஜெனரல் டான் ரஸின் கெய்னை டிரம்ப் பரிந்துரைத்திருக்கிறார். பிரவுனுடன் டிரம்ப் நிறுத்திக்கொள்ளவில்லை. மேலும் ஐந்து உயர்மட்ட பதிவிகளை வகித்து வருபவர்களும் விரைவில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறார்.
நம்மூரில் பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதையும், இடஒதுக்கீடு மூலம் வேலைக்கு வருபவர்களையும் பார்த்து கேள்வி கேட்கும் பிற்போக்குவாதிகளை போல, பிரவுனை பார்த்து டிரம்பின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் சில மோசமான கேள்விகளை முன்வைத்திருந்தார். அதாவது பிரவுன், பிரவுன் நிறத்தில் (கறுப்பினத்தவர்) இருப்பதால்தான் இந்த பதவிக்கு வந்தாரா? அல்லது திறமையின் அடிப்படையில் வந்தாரா? என்று கேள்விகளை கேட்டிருந்தார். இதனையடுத்துதான் இந்த பணி நீக்க உத்தரவு வந்திருக்கிறது.
பிரவுன் டார்கெட் செய்ய முக்கியமான காரணம், அவர் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததுதான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவில் வெள்ளை காவல்துறை அதிகாரிகளால் நிராயுதபாணியாக இருந்த ஜார்ஜ் பிளாய்ட் எனும் கறுப்பினத்தவர் கொலை செய்யப்பட்டார்.
அதன் பிறகு 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' எனும் இயக்கம் அமெரிக்கா முழுவதும் வேகமாக பரவியது. இந்த இயக்கத்திற்கு பிரவுன் ஆதரவளித்திருந்தார். வெளிப்படையாகவே இந்த இயக்கத்தை ஆதரித்து பேசியிருந்தார். எனவே அவர் அப்போது முதல் டிரம்ப் ஆதரவளார்களால் குறிவைக்கப்பட்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications