“டெஸ்லா மேல கை வச்சா.. தூக்கிடுவேன் பாத்துக்கோ!” எலான் மஸ்க்குக்காக அதிரடியில் இறங்கிய டிரம்ப்!
நியூயார்க்: எல்லா நாடுகளிலும் பணக்காரர்களுக்கு ஆதரவாக அரசு இருக்கும் என்கிற கருத்தை டிரம்ப் மீண்டும் நிரூபித்திருக்கிறார். டெஸ்லா நிறுவனத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போராட்டக்கார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அரசு துறைகளில் ஆட்குறைப்பு யோசனையை கொடுத்தது எலான் மஸ்க்தான். இதனால் ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். அவர்கள் டெஸ்லா நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

டிரம்ப் சீற்றம்:
போராட்டக்காரர்கள் குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது, "டெஸ்லா மீது தாக்குதல் நடத்துபவர்கள் உள்ளூர் தீவிரவாதிகள். இவர்கள் பிடிபடும்போது பெரிய பிரச்சனையை எதிர்கொள்வார்கள். ஏராளமான கேமராக்கள் இருக்கிறது. ஆல்ரெடி இந்த சம்வபத்தில் ஈடுபட்டவர்களை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம். அவர்களை பிடிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். சமூகத்திற்கு தொந்தரவை ஏற்படுத்தும் இவர்கள் கெட்டவர்கள், குப்பைகளுக்கு சமமானவர்கள்.
அவர்கள் கைது செய்யப்படும்போது மிக மோசமான தண்டனையை எதிர்கொள்வார்கள். அவர்கள் அமெரிக்காவின் மிக சிறப்பான ஒரு நிறுவனத்தை சேதப்படுத்தியிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
எலான் மஸ்க்கின் ஆட்டம்:
இந்த பிரச்சனைக்ளுக்கு தொடக்கம் எலான் மஸ்க்தான். அதாவது நம்மூரில் அமலாக்கத்துறை, சுங்கத்துறை போன்று அமெரிக்காவில் ஏராளமான துறைகள் இருக்கின்றன. இந்த துறைகளில் அளவுக்கு அதிகமான ஆட்கள் வேலையில் இருக்கிறார்கள். தண்டத்திற்கு அவர்களுக்கு சம்பளம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எனவே இவர்களை வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்று அதிபர் டிரம்ப் முடிவெடுத்தார். இந்த முடிவில் அடிப்படையில் அமைக்கப்பட்டதுதான் DOGE துறை.
'அரசு செயல்திறன் துறை' (Department of Government Efficiency - DOGE) என்பதுதான் இதன் அர்த்தம். இந்த துறையின் வேலை, மற்றவர்களை பணியிலிருந்து அனுப்புவதுதான். 1.50 லட்சம் பேர் இதன் மூலம் வேலையை இழந்துள்ளனர்.
மக்கள் போராட்டம்:
அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஆனால் அவை சமூக பாதுகாப்பான வேலைகள் கிடையாது. அப்படியெனில், ஓனர் நினைத்தால் உங்களை எப்போது வேண்டுமானாலும் வேலையிலிருந்து தூக்கிவிடலாம். நவீன கொத்தடிமை மாதிரி.. எனவே அமெரிக்க மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அரசு துறை வேலைதான். குடும்பத்தில் ஒருவர் அரசு துறையில் இருந்தால் போதும், அக்குடும்பம் கொஞ்சம் பிழைத்துக்கொள்ளும்.
ஆனால், டிரம்ப் இந்த அடிமடியிலேயே கை வைத்துவிட்டார். எனவே மக்கள் கொந்தளித்துபோய், டிரம்ப்புக்கு சொந்தமான டெஸ்லா நிறுவனங்களை அடித்து துவைத்திருக்கிறார்கள்.
டெஸ்லா மீது தாக்குதல்:
ஓரிகன் மாகாணத்தில் கடந்த ஜன.20ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 50,000 அமெரிக்க டாலர் வரை சேதம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, லவ்லேண்ட் பகுதியில் ஜனவரி, பிப்ரவரி என தொடர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. டைகார்ட் பகுதியில் மார்ச் 6ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் பெரும் கவனம் பெற்றிருந்தன.
இப்படி தொடர் தாக்குதல் காரணமாக டெஸ்லா டீலர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடையை திறந்தால் எப்போது, யார், எங்கிருந்து எதை வீசுவார்கள் என்று பயந்துபோய் இருக்கின்றனர். இந்நிலையில்தான் டெஸ்லாவுக்கு ஆதரவாக அதிபர் டிரம்ப் குரல் கொடுத்திருக்கிறார்.
டெஸ்லா நிறுவனத்திற்கு எதிரான மக்களின் போராட்டமும், அதற்கு எதிராக டிரம்ப் பேசியிருப்பதும் சர்வதேச அளவில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications