13 பில்லியன் டாலர்.. பஸ்பமாக மறையப்போகிறது.. இந்திய ஐடி துறைக்கு.. காத்திருக்கும் பெரிய ஆபத்து
நியூயார்க்: இந்திய ஐடி நிறுவனங்கள் கடுமையான சவால்களையும், சிக்கல்களையும் எதிர்கொள்ள தொடங்கி உள்ளன. அமெரிக்காவின் வர்த்தகக் கட்டுப்பாடுகள், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல் மற்றும் மந்தமான வளர்ச்சி போன்ற காரணங்களால் இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில், சுமார் 600 பெரிய ஐடி ஒப்பந்தங்கள் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் புதுப்பிக்கப்பட உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 13 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை முறையாக புதுப்பிக்கப்படுமா அல்லது இந்திய ஐடி நிறுவனங்களை விட்டு வெளியேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐடி நிறுவனங்கள் சரிவு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், HCLடெக் மற்றும் விப்ரோ ஆகியவற்றுக்கு சுமார் 13 பில்லியன் டாலர் (சுமார் ₹114,400 கோடி) மதிப்புள்ள ஒப்பந்தங்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் புதுப்பிக்கப்பட உள்ளன.
2024 ஆம் ஆண்டில் மட்டும் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இந்த ஆண்டு 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி ஒப்பந்தங்கள் புதுப்பிப்புக்காகக் காத்திருந்தன. அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் போன்ற சூழலில் இந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த எவரெஸ்ட் குரூப் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 600க்கும் மேற்பட்ட ஐடி ஒப்பந்தங்கள் புதுப்பித்தலுக்கு வரவுள்ளன. இவற்றின் சராசரி மதிப்பு 20 மில்லியன் டாலரிலிருந்து 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும்; சில ஒப்பந்தங்கள் 2 பில்லியன் டாலரையும் தாண்டும் என்று தி எகனாமிக் டைம்ஸ் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
புதுப்பிக்கப்படவுள்ள முக்கிய ஒப்பந்தங்களில் ஸ்டார் அலையன்ஸ் மற்றும் நீல்சென் உடனான TCS இன் கூட்டாண்மைகள் அடங்கும். இன்ஃபோசிஸ், Daimler AG மற்றும் GE அப்ளையன்ஸஸ் உடன் செய்த மெகா ஒப்பந்தங்களையும், HCLடெக் எரிக்சன் (ஸ்வீடன்) மற்றும் செஸ்னாரா (இங்கிலாந்து இன்சூரன்ஸ் நிறுவனம்) உடன் செய்த ஒப்பந்தங்களையும் கொண்டுள்ளது.
மேலும், விப்ரோ E.ON (ஜெர்மனி), ஃபோர்ட்டம் (பின்லாந்து) மற்றும் பெட்ரோப்ராஸ் (பிரேசில்) ஆகிய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை புதுப்பிக்க உள்ளது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தின் புதுப்பிப்பும் தற்போதைய சந்தை நிலவரத்தில் ஐடி நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடி துறை வளர்ச்சி
ஐடி துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒற்றை இலக்க வளர்ச்சியிலேயே இருந்து வருகிறது. உலகப் பொருளாதார மந்தநிலை, அமெரிக்க வர்த்தகக் கட்டுப்பாடுகள் காரணமாக உற்பத்தி மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு போன்றவை இந்தத் துறையை கடுமையாக பாதித்துள்ளன. இவை முறையாக புதுப்பிக்கப்படுமா அல்லது இந்திய ஐடி நிறுவனங்களை விட்டு வெளியேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளையும், ஊதிய உயர்வு நிறுத்துதல் போன்ற முடிவுகளையும் அறிவித்தன. ஜூலை மாதம், TCS சுமார் 12,000 ஊழியர்களை (அதன் உலகளாவிய ஊழியர்களில் 2%) பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இது டாடா குழும நிறுவனங்களில் நடந்த மிகப்பெரிய ஆட்குறைப்புகளில் ஒன்றாகும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப அவுட்சோர்சிங் பணிகளை வழங்குவதை தடுக்க திட்டமிட்டுள்ளதாக வரும் செய்திகள், உள்நாட்டு ஐடி நிறுவனங்களுக்கு மேலும் கவலையை அளித்துள்ளன. இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்க சந்தையை பெரிதும் சார்ந்துள்ளதால், இந்தச் செய்தி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications