இந்தியா பற்றி பேசுனா.. அமெரிக்கா பற்றி நாங்களும் கருத்து தெரிவிப்போம்! ஜெய்சங்கர் பளார் பதிலடி!
நியூயார்க்: இந்தியாவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல் தொடர்பான சம்பவங்களை கவனித்து வருகிறோம் என்ற அமெரிக்காவின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தக்க பதிலடி கொடுத்தார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் மத ரீதியான மோதல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. கர்நாடகாவில் ஹிஜாப் தடை, இஸ்லாமிய கடைகள் புறக்கணிப்பு, ஹலால் உணவிற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டது, ராம நவமி அன்று மசூதிகள் முன்னிலையில் கோஷம் எழுப்புவது என்று பல்வேறு சம்பவங்கள் நாடு முழுக்க இஸ்லாமியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

என்ன சொன்னார்?
இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்தியா குறித்து முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோர் 2+2 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர்.

கண்காணிக்கிறோம்
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்தியாவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல் தொடர்பான சம்பவங்களை கவனித்து வருகிறோம். இந்தியாவில் சமீபத்தில் நடந்த சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சில அரசாங்க அமைப்புகள், போலீஸ், சிறை துறை அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படும் விஷயங்களை கவனித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதை பற்றி விளக்கமாக பேச அவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா
இந்த நிலையில் அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவின் கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்தார். அதில், மனித உரிமைகள் தொடர்பாக நாங்கள் இந்த சந்திப்பில் இதுவரை எதுவும் பேசவில்லை. இந்த சந்திப்பு என்பது அரசியல் சம்பந்தப்பட்டது. அரசியல் மற்றும் ராணுவ விவகாரங்களை மையப்படுத்தியே இந்த சந்திப்பு நடைபெற்றது.

மனித உரிமைகள்
மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களை கடந்த காலங்களில் விவாதித்து இருக்கிறோம். அமைச்சர் பிளிங்கன் இந்தியா வந்த சமயங்களில் அதை பற்றி விவாதித்து இருக்கிறோம். நீங்கள் அந்த சமயத்தில் வெளியான செய்தியாளர் சந்திப்பை எடுத்து பார்க்கலாம். அப்போது நாங்கள் என்ன விவாதித்தோம் என்பதை வெளிப்படையாக நான் பேசி இருப்பேன்.

என்ன நிலைப்பாடு?
நாங்கள் இந்த விஷயத்தில் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம். எங்கள் நாட்டு விவகாரங்கள் மீது கருத்து தெரிவிக்க உரிமை இருப்பதாக சிலர் நினைக்கலாம். அதே சமயம் அவர்கள் நாட்டு விவகாரங்கள் மீதும் கருத்து தெரிவிக்க எங்களுக்கு உரிமை உள்ளது. அவர்கள் நாட்டு விவகாரங்கள், லாபிகள், மற்றும் வாக்கு வங்கி அரசியல் மீது கருத்து தெரிவிக்க எங்களுக்கும் உரிமை உள்ளது.

மனித உரிமை
எங்களுக்கும் மற்ற நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் மீது பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அதை பற்றி நாங்களும் கருத்து தெரிவிக்க முடியும். அமெரிக்காவின் மனித உரிமை விவகாரங்கள் உட்பட அனைத்தையும் பற்றி கருத்து தெரிவிக்க முடியும். அமெரிக்காவில் மனித உரிமை பிரச்சனை ஏற்படும் போது அதை பற்றி நாங்கள் பேசுவோம். முக்கியமாக இந்திய அமெரிக்கர்களுக்கு ஏற்படும் போது அதை பற்றி நாங்கள் பேசுவோம்.
Recommended Video

நேற்று நடந்த சம்பவம்
ஏன் நேற்று கூட அமெரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அதை பற்றியும் நாங்கள் பேசுவோம் என்று அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். அமெரிக்கா இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்காவின் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிடுவோம் என்பதை அறைந்தார் போல நேற்று ஜெய்சங்கர் வெளிப்படையாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications