அமெரிக்காவில் பகுதிநேர வேலை பார்த்தபடி படித்து வந்த தெலுங்கானா மாணவர்.. திடீரென பாய்ந்த குண்டு
நியூயார்க்: தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது மாணவர் பிரவீன் அமெரிக்காவின் மில்வாக்கியில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார். அந்த கடையில் கொள்ளையர்கள் புகுந்து திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பகுதி நேரமாக வேலை செய்து படிக்கும் இந்திய மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷாத்நகர் பகுதியில் வசித்து வரும் ராகவலு மற்றும் ரமாதேவி தம்பதியின் மகன் பிரவீன். இவருக்கு 27 வயது ஆகிறது. இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர் கல்வி படிப்பதற்காக அமெரிக்காவின் மில்வாக்கி சென்றுள்ளார். அங்குள்ள மில்வாகி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

ஹைதராபாத் மாணவர் பிரவீன், படிக்கும் போதே பகுதி நேரமாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் சொந்த ஊருக்கு வந்து விட்டு, ஜனவரியில் பிரவீன் அமெரிக்காவுக்கு திரும்பி சென்றுள்ளார். வருகிற ஆகஸ்டில் அவருடைய படிப்பு முடிகிறது. இந்நிலையில் தான், மாணவர் பிரவீன் பகுதிநேரமாக வேலை செய்து வந்த கடையில், கடந்த புதன்கிழமை அன்று கொள்ளையர்கள் புகுந்தனர். அப்போது அவர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹைதராபாத் மாணவர் பிரவீன் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.
இந்த தகவல் அமெரிக்காவில் இருந்து குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.இதுபற்றி பிரவீனின் குடும்பத்தினர் கூறும்போது, நள்ளிரவில் தொலைபேசி அழைப்புகள் வந்தது. ஆனால், நாங்கள் அதனை கவனிக்கவில்லை. இதன்பின்னர் இன்று (நேற்று) காலை மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. அப்போது மறு முனையில் பேசியவர்கள், பிரவீனின் பிறந்த தேதி உள்ளிட்ட அவனுடைய தனிப்பட்ட விவரங்களை கேட்டார்கள் அது ஒரு போலியான தொலைபேசி அழைப்பாக இருக்குமோ என்று நாங்கள் சந்தேகித்தோம்.
ஆனால், அவனுடைய நண்பர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவர்களுக்கும் பிரவீன் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாது என்று கூறினார்கள். அவர்களிடம் விசாரிக்குமாறு கூறினோம். அவர்கள் வெளியே சென்று விசாரித்த போது, பகுதிநேர வேலைக்காக ஒரு கடைக்குச் சென்றதாகவும், ஒரு கொள்ளையின் போது, கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் ஒரு குண்டு தாக்கி பிரவீன் இறந்தாகவும் எங்களிடம் தெரிவித்தனர்..இவ்வாறு பிரவீனின் குடும்பத்தினர் கூறினார்கள்.இந்த சம்பவம் இந்திய மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications