ரூ.300, 500.. ஒருபக்கம் எடப்பாடி பேச.. மறுபக்கம் பணப் பட்டுவாடா! அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
நீலகிரி: நீலகிரி லோக்சபா தொகுதியில் பணப் பட்டுவாடா செய்த அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் பணப் பட்டுவாடாவை தடுப்பதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி தொகுதியில் திமுக சார்பில், ஆ.ராசா, பாஜக சார்பில் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து நேற்று தேர்தல் பிரச்சார, மேற்கொண்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஊட்டியில் திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி ஒருபக்கம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருக்க, மறுபுறம், அதிமுக நிர்வாகி ஒருவர், பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு பணப் பட்டுவாடா செய்து கொண்டிருந்த வீடியோ வெளியானது.
பிரச்சார கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் பெள்ளி என்பவர், ரூ.300, ரூ. 500 என பங்கு பிரித்து பணம் கொடுத்த வீடியோ வெளியான நிலையில், இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி தனலட்சுமி, ஊட்டி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் அதிமுக ஒன்றிய செயலாளர் பெள்ளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டப் பகலில் பிரச்சாரக் கூட்டத்தில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications