எடப்பாடி பழனிச்சாமி மனது புண்பட்டிருந்தால்.. மனம் திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்- ஆ.ராசா பேட்டி
ஊட்டி: தனது பேச்சு காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மனம் திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை ஆயிரம் விளக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஆ.ராசா , எடப்பாடி பழனிசாமி அரசியலில் பெற்ற வளர்ச்சி பற்றி ஒரு உவமையை தெரிவித்து பேசினார்.
இந்த உவமை முதல்வரின் தாயார் குறித்து அவதூறு பரப்புவதாக இருப்பதாக கடும் கண்டனங்கள் எழுந்தன.
ஆ.ராசா விளக்கம்
இந்த நிலையில் தனது பேச்சு திரித்து வெளியிடப்பட்டதாக ராசா விளக்கமளித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தங்களது கட்சியினர் பேச்சுக்கள் திரித்து வெட்டி ஒட்டி ஒளிபரப்பப் படுவதாக குற்றம் சாட்டினார். அதேநேரம் பிரச்சாரத்தின்போது வார்த்தைகளை கவனமாக பேசுமாறு தனது கட்சியினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வர் வருத்தம்
இந்த நிலையில்தான், நேற்று, திருவெற்றியூரில் முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தனது தாய் குறித்து அவதூறாக பேசி விட்டார்கள் என்று கண்ணீர் மல்க உணர்ச்சிப் பெருக்குடன் பேசியிருந்தார்.
நீலகிரியில் பேட்டி
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராசா இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் , தனது பேச்சால் முதல்வர் மனது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
புண்பட்டால் மன்னிப்பு
ராசா கூறியதாவது: எனது பேச்சால் முதல்வர் காயப்பட்டார் என்ற செய்தியை நாளிதழ் வாயிலாக படித்து மிகுந்த மன வேதனை அடைகிறேன். இடப் பொருத்தம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக, அடி மனதில் இருந்து வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் . இன்னும் ஒரு படி மேலே போய் சொன்னால், முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல், உள்ளபடியே காயப்பட்டு இருப்பதாக உணர்வாரேயானால், எனது மனம் திறந்த மன்னிப்பு கோருவதில் எனக்கு சிறிதும் தயக்கம் இல்லை. முதல்வருக்கும் அவரது கட்சிக்காரர்களுக்கும், நடுநிலையாளர்களும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது , எனது பேச்சு இரண்டு தனி நபர்கள் பற்றிய தனிநபர் விமர்சனம் அல்ல. பொது வாழ்க்கையில் இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த மதிப்பீடு தான். இவ்வாறு தெரிவித்துள்ளார்
2ஜி வழக்கு தீர்ப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி காயப்பட்டு இருந்தால் மன்னிப்பு கோரும் அதேவேளையில், ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன். என் மீது தொடுக்கப்பட்ட 2ஜி வழக்கை விசாரித்த நீதிபதி சைனி தனது தீர்ப்பின் கடைசி பக்கத்தில் இந்த வழக்கு எப்படி புனையப்பட்டது என்பதை நான்கு ஆங்கில வார்த்தைகளால் குறிப்பிட்டு முடித்தார். கோப்புகளை தவறாக படித்ததாலும், தேர்ந்த சிலவற்றை மட்டுமே படித்தாலும், சிலவற்றை படிக்காமல் விட்டதாலும், பொருத்தமற்ற சில கோப்புகளை படித்ததாலும் புனையப்பட்ட வழக்கு தான் இந்த வழக்கு என்று சைனி என் மீது தொடரப்பட்ட 2ஜி வழக்கில் தீர்ப்பு அளித்தார். என்னுடைய 40 நிமிட உரையை முழுவதுமாக கேட்டால், நீங்களும், தமிழ்நாட்டு மக்களும் சைனி என்ன தீர்ப்பை கொடுத்தாரோ அதே போன்ற தீர்ப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.