குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு! 2 மணி நேரம் நடுவழியில் சிக்கித் தவித்த எல்.முருகன்!
நீலகிரி: குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையே உள்ள பர்லியார் என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடுவழியில் சிக்கித் தவித்தார்.
கடந்த 2 நாட்களாகவே கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு முதல் பெய்த கனமழை காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையே உள்ள பர்லியாறு செக் போஸ்ட் அருகே மண் சரிவு ஏற்பட்டது. அதேபோல் குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் ஆங்காங்கு மரங்களும் வேரோடு முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டு 2 மணி நேரமாக ஸ்தம்பித்தது.

இந்தச் சூழலில் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பர்லியாறு அருகே ஏற்பட்ட மண் சரிவு காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மலைப்பாதையில் நடுவழியில் சிக்கித் தவித்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மண்ணை அள்ளி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதுகுறித்து எல்.முருகன் தரப்பில் கூறுகையில், சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறைத் தொடர்ந்து அதை சரி செய்யும் பணிகளை அமைச்சர் முருகன் மேற்பார்வையிட்டார், மக்களின் பயணம் இடையூறு இல்லாமல் இருப்பதை உறுதி செய்த பிறகு கிளம்பிச் சென்றார் என்று தெரிவித்துள்ளனர்.
விடுமுறை தினம் என்பதால் குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் வழக்கத்தை விட கூடுதல் எண்ணிக்கையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதையடுத்து காவல்துறையினர் உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையினர் மண் சரிவை சரி செய்து போக்குவரத்தை சீர் செய்தனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் எல்.முருகன் போட்டியிடவுள்ளதால் அடிக்கடி நீலகிரிக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார்.
நீலகிரி மக்களவை தொகுதியில் ஆ.ராசாவை தோற்கடித்தே தீர வேண்டும் என்ற பாஜக மேலிடத்தின் அசைன்மெண்டை நிறைவேற்றும் வகையில் நீலகிரி தொகுதி முழுவதும் சலிக்காமல் சுற்றிச் சுழன்று வருகிறார் எல்.முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications