தொடர் மழையால் உதகையில் மண்சரிவு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கோரையாறு தரைப்பாலம்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகையில் இரவும் முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால், மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நீலகிரியில்தான் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான தலைகுந்தா, எச்.பி.எஃப், பாலடா, கல்லட்டி மலைப்பாதை, நடுவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் நேற்று இரவு முதல் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பைக்கரா அணையிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கல்லட்டி மலைத் தொடர்களில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சி ஏற்பட்டு மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனிடையே உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 36 கொண்டை ஊசி வளைவு கொண்ட மலைப்பாதையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகளும், மரங்களும் சாலைகளில் விழுந்தன. இதனைத் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஜேசிபி இயந்திரங்களுடன் நெடுஞ்சாலை துறையினர் சாலையில் விழுந்துள்ள மண் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருவதால் உதகையில் கடும் குளிர் நிலவி வருகிறது. மழை காரணமாக, உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது.
விழுப்புரம் தரைப்பாலம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் - மாரங்கியூர் இடையே இந்தாண்டு கட்டப்பட்ட கோரையாறு தரைப்பாலம் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட கோரையாற்றில் அதிக தண்ணீர் வந்ததால் ஏனாதிமங்கலம் -மாரங்கியூர் இணைப்பு தரைப்பாலம் இந்தாண்டு ரூபாய் 24 லட்சம் மதிப்பீடு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது அடுத்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வருவது அதிகரித்துள்ளது. இதனால் ஏனாதிமங்கலம் மாரங்கியூர் இடையே அமைக்கப்பட்ட தரைப்பாலும் மீண்டும் கோரையாற்று வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது.
இதன் காரணமாக, மாரங்கியூர், சேத்தூர், பையூர், கொங்கராயநல்லூர் ஆகிய நான்கு கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் கிராம மக்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.