உறைந்து போன ஊட்டி.. ஆனாலும் குறையாத புக்கிங்ஸ்! சீசன் டைம் போல.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
நீலகிரி: நாடு முழுவதும் குளிர் அலை வீசி வருகிறது. இதன் தாக்கம் ஊட்டியிலும் எதிரொலித்திருக்கிறது. தற்போது ஊட்டியில் சில இடங்களில் உறைபனி நிலவி வருகிறது. இருப்பினும், ஓட்டல்களில் புக்கிங்ஸ் குறையவில்லை. சுற்றுலா பயணிகள் உறைபனி காலநிலையையும் நன்றாக என்ஜாய் செய்து வருகின்றனர்.
மத்திய இந்தியாவில் குளிரின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, டெல்லியில் 4 - 7 டிகிரி செல்சியஸ் வரை குளிர் நிலவுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் இந்த ஆண்டு நவம்பரில் குளிர் பதிவாகி இருந்தது. இந்த குளிர் தற்போது டிசம்பர் வரை நீடித்து வருகிறது.

ஊட்டியில் நிலைமை என்ன?
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஊட்டியில் குளிரின் தாக்கம் தீவிரமாக உள்ளது. தலைகுந்தாவில் 2 டிகிரி செல்சியஸாகவும், உதகமண்டலத்தில் 4.1 டிகிரி செல்சியஸாகவும் குளிர் பதிவாகியுள்ளது. கடும் குளிர் காரணமாக, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா? என்பதை அங்குள்ள ரெசார்ட் மேனேஜர்களிடம் ஒன் இந்தியா சார்பில் விசாரித்தோம்.
பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா?
குளிர் காரணமாக, தமிழ்நாடு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது உண்மைதான். ஆனால், வெளி மாநிலங்களிலிருந்து, குறிப்பாக பெங்களூர் போன்ற நகரங்களிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எனவே ஒட்டுமொத்த பயணிகளின் எண்ணிக்கையில் எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
புக்கிங்கில் மாற்றம்
நம்மிடையே பேசிய ரெயின்போ காட்டேஜஸ் மேனேஜர், "கடும் குளிர் நிலவுகிறது என்பதை தெரிந்துக்கொண்டுதான் பயணிகள் இங்கு வருகின்றனர். இந்த முறை தமிழக பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதனை வெளிமாநில பயணிகள் ஈடு செய்கின்றனர். எனவே ரூம்கள் வழக்கம்போல் பிசியாகவே இருக்கிறது. இன்னும் பள்ளி விடுமுறை தொடங்கவில்லை. எனவே, 10% அளவுக்க புக்கிங்கில் கொஞ்சம் ஏற்றம் இறக்கம் இருக்கிறது. விடுமுறை தொடங்கியதும் சம்மர் சீசன் போலவே இது மாறிவிடும்" என்று கூறியுள்ளார்.
சிறப்பு வசதிகள்
அதேபோல, கங்கா ஸ்ரீ பாலாஜி காட்டேஜஸ் மேனேஜரிடம் விசாரித்தோம். "புக்கிங்கில் பெரிய மாற்றம் இல்லை. வழக்கம்போலத்தான் இருக்கிறது. இங்கு வரும் பயணிகளுக்கு குளிரை எதிர்கொள்ள சிறப்பு வசதிகளை செய்து கொடுக்கிறோம். வழக்கமாக எல்லா ரெஸ்டாரன்ட்களிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். குளிக்க வெந்நீர், ரூம்களை கதகதப்பாக வைக்க ஹீட்டர் வசதி, வழக்கமாக வழங்குவதை விட, குளிரை அதிகம் தாங்கும் போர்வைகள் போன்றவை வழங்கப்பட்டிருக்கிறது. இங்கு வருபவர்களும் இதெல்லாம் தெரிந்துதான் வருகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
சீசனுக்கு ஏற்ற பயணிகள்
அதேபோல ஓட்டல் சில்வர் ஓக் ரெசார்ட், மேனேஜரிடம் விசாரித்தபோது, "வழக்கமான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையே தற்போதும் இருக்கிறது. எனவே சம்மர் சீசனில் என்ன வாடகையை நிர்ணயித்திருக்கிறோமோ, அதே அளவுக்கு வாடகையை நிர்ணயித்திருக்கிறோம். சம்மருக்கும், குளிர் கால பயணிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. கோடையில் வயதானவர்களும் இங்கு வருவார்கள். ஆனால், குளிர் காலத்தில் வயதானவர்களின் வருகை குறைவாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
ஆர்வம் காட்டும் பயணிகள்
வழக்கமாக குளிர்காலங்களில் ஊட்டிக்கு வருபவர்கள் உறை பனியை ரசிக்கவே வருவார்கள். எனவே அதிகாலை 4 -7 மணி வரை குளிர் தாங்கும் உடைகளுடன் உறைபனியை பார்க்க கிளம்பி விடுவார்கள். இந்த சீசனில் முதுமலை தேசிய பூங்கா செல்லும் பாதையில் உள்ள, சமவெளி மற்றும் தாழ்வான பகுதிகளில் அதிக அளவு உறைபனி இருக்கும். எனவே அதை பார்க்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள்.
எந்த ஸ்பாட் பெஸ்ட்?
அதேபோல, அவலாஞ்சி மற்றும் எமரால்டு ஏரியை சுற்றி பார்க்கவும் விரும்புவார்கள். கோலி கிராஸ் எனும் பகுதி, தேயிலை தோட்டங்கள் மற்றும் புல்வெளிகள் நிறைந்த அமைதியான பகுதியாகும். ஊட்டி மெயின் சிட்டியை போல, இந்த இடங்களில் அதிக அளவு விளக்குகள் இருக்காது என்பதால், தாவரங்களில் உறைபனி படர்ந்திருப்பதை பார்த்து ரசிக்க முடியும். இந்த இடங்களுக்கு எல்லாம் செல்ல சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் விரும்புவார்கள். எனவே ஊட்டி இந்த குளிர் காலத்திலும் களைகட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications