கோத்தகிரியில் 13 ஆண்டுகளாக பூட்டி கிடந்த வீடு.. படுக்கை அறையில் என்ன.. ஆடிப்போன எலக்ட்ரீசியன்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து சக்திமலை செல்லும் சாலையோரம் முன்னாள் வங்கி ஊழியரான மேத்யூ என்பவரது வீடு உள்ளது. அந்த வீடு பராமரிப்பு இல்லாமல் கடந்த 13 ஆண்டுகளாக பூட்டி கிடந்ததது. அந்த வீட்டில் எலக்ட்ரீசியன் ஒருவர் சுத்தம் செய்வதற்காக சென்றார். அங்கு அவர் சென்று பார்த்த காட்சி ஆடிப்போக வைத்துள்ளது.
பொதுவாக வீடுகள் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்தால் அதனை பேய் வீடு என்று மக்கள் செல்லவே அஞ்சுவார்கள். அப்படியான வீட்டில் 13 ஆண்டுகள் யாருமே போகாமல் திடீரென ஒருவர் போனால் என்னாகும். அதுவும் அங்கு படுக்கை அறையில் எலும்புக்கூடு இருந்தால் எப்படி இருக்கும். அதனை பார்த்தவர் மனநிலை எப்படி இருக்கும். அதுவும் நீலகிரி போன்ற மலைப்பிரதேசத்தில் இருந்தால்.. கற்பனை செய்து பாருங்கள். அப்படியான சம்பவம் நீலகிரி மாவட்டம் கோத்திகிரியில் நடந்துள்ளது. முழு விவரத்தை பார்ப்போம்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து சக்திமலை செல்லும் சாலையோரம் முன்னாள் வங்கி ஊழியரான மேத்யூ என்பவரது வீடு இருக்கிறது. அவர் இறந்த பின்னர் குடும்பத்தினர் கோவையில் குடியேறி விட்டார்கள். இதனால் கடந்த 13 ஆண்டுகளாக அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதன் காரணமாக வீடு பராமரிப்பின்றி பாழடைந்து கிடந்தது
இந்தநிலையில் மேத்யூவின் மகனான பிரசாந்த்(வயது 31), கோத்தகிரியில் உள்ள தனது நண்பரான எலக்ட்ரீசியன் சசி என்பவரை செல்போனில் அழைத்து வீட்டை சுத்தம் செய்து மின் இணைப்புகளை புதுப்பித்து தருமாறு கேட்டிருக்கிறார்.
அதன்படி சசி மற்றும் பணியாளர்கள் நேற்று வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.அப்போது படுக்கை அறை மெத்தையில் ஆண் ஒருவரது பிணம் அழுகி, எலும்புக்கூடாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர்கள் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் வீட்டின் உரிமையாளருடன் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை ஆய்வு செய்தனர்.
ஆனால், அவர் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, நீண்ட நாட்களாக வீட்டை பயன்படுத்தாமல் இருந்த காரணத்தால் மதுப்பிரியர்கள் யாரேனும் அதை பயன்படுத்தி வந்திருக்கலாம் என்பது தெரியவந்தது. ஆனால் இறந்தவர் யார் என தெரியவில்லை. கைப்பற்றப்பட்ட உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து டாக்டர் வரவழைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளது.
மேலும் இறந்தவரின் உடல் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதால், காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூட்டி இருந்த வீட்டில் அடையாளம் தெரியாத ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கோத்தகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications