ஸ்பெஷல் டே.. ஆஸ்கர் புகழ் பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடிய பிரதமர் மோடி! உற்சாகம்
நீலகிரி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னையில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இரவில் அவர் கர்நாடகா மாநிலம் மைசூர் சென்ற நிலையில் இன்று 2வது நாளாக தமிழகம் வருகிறார். நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் அவர் ஆஸ்கர் புகழ் பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடி கவுரப்படுத்தினார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பொம்மன்-பெள்ளி தம்பதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

சென்னை பல்லாவரம் அருகே உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று புதிய ரயில் திட்டம், சாலை திட்டம், கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்களை திறந்து வைத்தார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
சென்னை நிகழ்ச்சிகளை முடித்த பிரதமர் மோடி மைசூர் சென்றார். அங்கு ஓய்வெடுத்த பிரதமர் மோடி இன்று காலை கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சபாரி சென்றார். அங்கிருந்து இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வந்தார்.நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி வருகை புரிந்தார்.

அங்கு அவர் ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடி கவுரப்படுத்தினார். அப்போது அவர்களின் வாழ்க்கை முறை, குட்டி யானை வளர்ப்பு உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி கேட்டறிந்ததாகவும், அவர்களின் சேவைக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் பிரதமர் மோடி முகாமில் உள்ள யானை பாகன்களை சந்தித்து பேசினார். அப்போது யானைகள் வளர்ப்பு, பராமரிப்பு பற்றிய விஷயங்களை கேட்டார். மேலும் யானைகளுக்கு பிரதமர் மோடி உணவாக கரும்பு வழங்கினார். அப்போது யானை துதிக்கையை தூக்கி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தது.
மேலும் இன்று பிரதமர் மோடி தெப்பக்காடு முகாமுக்கு வருகை தர முக்கிய காரணம் என்பது பொம்மன் -பெள்ளி தம்பதியாகும். பழங்குடியினத்தை சேர்ந்த இவர்கள் சமீபத்தில் தாயைப் பிரிந்த குட்டி ரகு, பொம்மி எனும் குட்டி யானைகளை பராமரித்தனர். இந்த யானைகளை தங்களின் குழந்தைகள் போல் இருவரும் பராமரித்தனர். இந்த யானைகளை இந்த தம்பதி எப்படி பராமரித்தனர் என்பதை மையமாக கொண்டு ‛தி எலிபன்ட் விஸ்பரரஸ்' என்ற பெயரில் ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கி இருந்தார். குனீத் மோங்கா தயாரித்திருந்தார்
இந்த படத்தில் பொம்மன்-பெள்ளி தம்பதிக்கம் யானைக்கும் இடையேயான உறவு மிகவும் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஆவணப்படம் சமீபத்தில் நடந்த 95வது ஆஸ்கர் விழாவில் விருது வாங்கியது. இதன்மூலம் பொம்மன்-பெள்ளி தம்பதி உலகம் முழுவதும் புகழ் பெற்றனர்.
இந்த தம்பதியை அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து கவுரவித்தார். தலா ரூ.1 லட்சம் பரிசாக வழங்கினார். மேலும் இயக்குநர் கார்த்திகி அண்மையில் முதல்வரை சந்தித்து பாராட்டு பெற்றார். அவருக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த தம்பதிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் ஆஸ்கர் விருதுடன் பொம்மன்-பெள்ளி தம்பதி எடுத்து கொண்ட போட்டோ இணையதளங்களில் வைரலானது.
இந்நிலையில் தான் இன்று பிரதமர் நரேந்திர மோடி பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து இருவரிடம் கலந்துரையாடிானர். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி தெப்பக்காடு யானைகள் முகாமில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு போடப்பட்டு இருந்தது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி பொம்மன்-பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்திப்பதாக அறிவிப்பு வெளியானது முதல் இருவருக்கும் 24 மணிநேர போலீஸ் காவல் வழங்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications