என்னாச்சு மாயா.. கடைசி வரை கண்ணில் காட்டவே இல்லையே.. துடித்து அழுத இளம் கணவர்!
பிரசவத்தில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஊட்டி: "மாயா.. மாயா.. கடைசி வரை மாயாவை என் கண்ணுல காட்டவே இல்லையே" என்று பிரசவத்தில் உயிரிழந்த மனைவியை கண்டு, கணவர் அழுத காட்சி காண்போரை நிலைகுலைய வைத்தது.
ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்... இவர் ஒரு எலக்ட்ரிஷியன்.. கல்யாணம் ஆகி ஒரு வருடமாகிறது.. மனைவி பெயர் மாயா.. 20 வயது!

நிறைமாத கர்ப்பிணியான மாயாவுக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி வந்துவிட்டது.. அதனால், ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் அனுமதித்தனர்... சிறிது நேரத்தில் பெண் குழந்தை பிறந்தது.
இந்த விஷயத்தை கேட்டதும் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.. ஆனால் மாயா இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.. நடுராத்திரி இப்படி ஒரு செய்தியை கேட்டு குடும்பத்தினர் அலறி துடித்தனர்.. பிரசவம் பார்த்தது எல்லாமே பெண் டாக்டர்கள்தான்.. எப்படி மாயா இறந்தார் என்பது தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து கதறினர்.
கர்ப்பிணியாக சென்ற பெண் சடலமாக இருப்பதை பார்த்து மோகன்ராஜ் கண்ணீர் விட்டு அழுதார். பிறகு மனைவியின் சாவில் மர்மம் இருப்பதாக சொல்லி மோகன்ராஜ், ஊட்டி ஸ்டேஷனில் புகார் தந்தார்.. இதையடுத்து போலீசார் அந்த ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்... மாயாவின் சடலத்தையும் கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மாயா மரணத்தை குடும்பத்தினர், நண்பர்கள் என யாராலுமே ஜீரணிக்கவே முடியவில்லை.. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று கூறி, அந்த ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார் சமாதான பேச்சு நடத்தியும் அவர்களை சமாளிக்க முடியவில்லை.. "ராத்திரி 7 மணி வரைக்கும் எங்க கிட்ட மாயாவையும் கண்ணில் காட்டல, பிறந்த குழந்தையையும் எங்களுக்கு கண்ணில் காட்டல.. இதுல ஏதோ மர்மம் இருக்கு.. முறையான விசாரணை வேண்டும்" என்று அழுதுகொண்டே சொன்னார்கள்.. இதையடுத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. இது சம்பந்தமாகவும் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.. அந்த குழந்தை இப்போது ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறது.. போலீசார் அடிக்கடி சென்று குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை குறித்து விசாரித்தும் வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications