வாட்டி வதைக்கும் வெப்பம்... நீலகிரியில் அடைக்கலமாகும் பிற மாவட்ட மக்கள்! களைக்கட்டிய கோடை சீசன்
நீலகிரி: கோடைகாலம் தொடங்கியுள்ளதை அடுத்து உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
தமிழ்நாட்டில் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதத்தின் நடுப்பகுதி வரை கோடை வெப்பம் வாட்டி வதைப்பது இயல்பு.
குறிப்பாக மே மாதம் சூரியன் அதிகபட்ச சூட்டை இந்திய துணை கண்டத்தின் மீது இறக்கிவிடும். இதற்காகவே பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறைகள் அறிவிக்கப்படுன்றன.

சுட்டெரிக்கும் சூரியன்
ஆனால், இம்முறை ஏப்ரல் மாதத்தில் இருந்தே பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்தின் பிற்பகுதி மற்றும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதிகளில் தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் ஓரளவு நல்ல மழை பெய்தது. சில நாட்களுக்கு முன்புகூட தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது. ஆனால், அந்த மழையால் ஏற்பட்ட குளிர்ச்சி அடுத்த ஒரு நாளுக்கு கூட தாக்குப்பிடிக்கவில்லை.

100 டிகிரியை தாண்டிய வெயில்
அந்த அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கும் அளவுக்கு பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. குறிப்பாக வேலூர், திருச்சி, கரூர், திருத்தணி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.

ஆறுதல் தரும் குளிர் பிரதேசங்கள்
அதே நேரம் தமிழ்நாட்டின் குளிர் பிரதேசங்களான ஊட்டியில் 78.9 ஃபாரன்ஹீட் வெப்பமும், குன்னூரில் 78.8, வால்பாறையில் 82.4 ஃபாரன்ஹீட் வெப்பமும், கொடைக்கானலில் 70.52 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. எனவே பள்ளிகளுக்கு விடுமுறை விட்டவுடன் ஊட்டி, கொடைக்கானல் என குளிர் பிரதேசங்களுக்கு சென்று வெயிலில் இருந்து தப்பித்து விடுமுறையை கழிக்க மக்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.

உற்சாகம் தரும் ஊட்டி
குறிப்பாக இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிந்து ரசித்து மகிழ்வது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

களைகட்டும் கோடை சீசன்
அதுவும் 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்குடன் கோடையை கழித்த மக்கள் இம்முறை எந்த கட்டுப்பாடும் இன்று உதகைக்கு படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதை அடுத்து அங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களான உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

படகு சவாரி செய்து மகிழ்ச்சி
குறிப்பாக உதகையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான உதகை படகு இல்லத்தில் இன்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் காணப்பட்டது. உதகை படகு இல்லத்தில் உள்ள மிதவை படகு, துடுப்பு படகு, இயந்திரப் படகு உள்ளிட்ட படகுகளில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மக்களின் எதிர்பார்ப்பு
மேலும் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரியில் இம்முறை கோடை சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதுடன் அதிகளவிலான படகுகளை இயக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications