முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பு? மாநகராட்சியாகும் ஊட்டி.. நீலகிரி மாவட்டமே ரொம்ப குஷி
ஊட்டி: ஊட்டி நகராட்சியானது, மாநகராட்சியாக விரைவில் தரம் உயர போகிறது.. அப்படி மாநகராட்சியாகிவிட்டால், ஊட்டியின் முக்கிய தொழிலான விவசாயம், சுற்றுலா மேலும் சிறப்பாகும் என்று நம்பப்படுகிறது.
மலைகளின் அரசி என்று போற்றப்படும் ஊட்டியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன.. தற்சமயம் ஊட்டி நகராட்சியில் 1.25 கோடி பேர் வசிக்கின்றனர்.. சுற்றுலா நகரமான ஊட்டியில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்ட பெட்டா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா என ஏகப்பட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.

பழமை நிறுவனங்கள்: இவைகளை தவிர, ஊட்டி நகரில் ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்ட பழமையான பல முக்கிய கல்வி நிறுவனங்கள் இன்னமும் இயங்கி வருகின்றன. இவற்றில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் வெளிநாட்டு மாணவ, மாணவியர்களும் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.
அதேபோல, ஊட்டி நகரின் மையப்பகுதியில் செல்லக்கூடிய மேட்டுபாளையம் - ஊட்டி - மைசூர் தேசிய நெடுஞ்சாலை முக்கிய சாலையாக திகழ்ந்து வருகிறது. இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ள ஊட்டிக்கு, வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளியூர்களிலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வாடிக்கையாகும்..
அதுவும் கோடை விடுமுறைகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகிவிடும். மொத்தத்தில், நீலகிரிக்கு வருடந்தோறும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
வளர்ச்சி பணிகள்: எனினும் ஊட்டி நகரில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை.. மேம்பாட்டு பணிகளும் எதிர்பார்த்த அளவிற்கு மேற்கொள்ளப்படுவதில்லை... நகராட்சிக்கும் போதுமான நிதி கிடைப்பதில்லை.. இதனால், மேம்பாட்டு பணிகள், வளர்ச்சி பணிகள் மற்றும் தேவையான கட்டமைப்பு வசதிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளப்பட முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது..
எனவே, ஊட்டி நகராட்சியை தரம் உயர்த்தி மாநகராட்சியாக அறிவித்தால், பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியும்... அத்துடன் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களையும் எளிதாகவே பெற முடியும்... எனவே, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமானால், நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு முன் வேண்டும் என ஊட்டி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
ஒப்புதல்: இந்நிலையில், ஊட்டி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த நகராட்சி நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது.. நகர்மன்றத்தின் ஒப்புதல் பெறவேண்டி, நகராட்சி தலைவர் வாணீஸ்வரி தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதாவது, கேத்தி பேரூராட்சி, தொட்டபெட்டா, நஞ்சநாடு, இத்தலார் மற்றும் உல்லத்தி ஆகிய ஊராட்சிகளை இணைத்து ஊட்டி நகராட்சியை விரிவாக்கம் செய்து மாநகராட்சியாக அறிவிப்பது தொடர்பாக ஊட்டி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநகராட்சி: இந்த தீர்மானம், அனைத்து கவுன்சிலர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாநகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது...
இது குறித்து நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் சொல்லும்போது, "ஊட்டி நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ.43.94 கோடி ஆகும்... மாநகராட்சியாக தரம் உயர்ந்தால் பரப்பளவு 212.51 சதுர கிமீ பரப்பளவு கொண்ட மாநகராட்சியாக மாறும்.. ஆண்டு வருமானமும் ரூ.52.14 கோடியாக உயரும்.
கிராம ஊராட்சி: ஊட்டி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் அருகில் உள்ள ஒரு சில கிராம ஊராட்சிகள் ஊட்டியுடன் இணைக்கப்படும். அப்படி இணைக்கப்படும் ஊராட்சிகளில், ஊட்டிக்கு கொண்டு வரப்படும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். முக்கியமாக, சாலை வசதி, வாகன நிறுத்தம் வசதி பெரிய அளவில் நிறுவப்படும்.
இதன் மூலம் உள்ளூரில் உள்ள முக்கிய தொழிலான விவசாயம், சுற்றுலா சிறப்பாக நடைபெறுவதுடன், உள்ளூர் மக்களின் வருமானமும் உயர்ந்து வாழ்க்கை தரமும் மேம்படும்... ஊட்டி நகரின் முக்கிய தொழிலான சுற்றுலா, விவசாயம், தேயிலை உற்பத்தி ஆகிய தொழில்கள் மேலும் வளர்ச்சியடைந்து வேலைவாய்ப்புகளும் உருவாகும்.. இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த தீர்மானம், அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்" என்றார்.
மகிழ்ச்சி: ஊட்டி மக்களின் நீண்ட கால ஆசை நிறைவேற போவதால், நீலகிரியே மகிழ்ச்சியில் உள்ளது.. விரைவில் ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications