விவசாயிகளுடன் சென்ற படகு கங்கையில் கவிழ்ந்து விபத்து.. 2 பேரை காணவில்லை! தேடும் பணி தீவிரம்
பாட்னா: பீகாரில் விவசாயிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் இரண்டு பேரை காணவில்லை. எனவே அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
பீகார் மாநிலத்தின் மானேர் மாவட்டத்தில் உள்ள மகாவீர் தோலா கிராமத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்திருக்கிறது. இந்த கிராமத்திற்கு வரவேண்டும் எனில் படகு மூலமாகத்தான் வர முடியும். எனவே தினமும் இங்குள்ள விவசாயிகள் படகு மூலம் ஆற்றை கடந்து காய்கறிகளை கொண்டு சென்று விற்பதுண்டு. அதேபோல இன்று காலையும் 10-12 விவசாயிகள் ஆற்றை கடந்திருக்கிறார்கள்.

அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்திருக்கிறது. இதில் 10 பேர் வரை நீந்தி ஆற்றை கடந்திருக்கிறார்கள். 2 பேர் மட்டும் காணவில்லை. எனவே இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. மாநில பேரிடர் மீட்பு படையினர் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த விபத்து குறித்து அவர்கள் கூறுகையில்,
"காலை 7-8 மணியளவில் இந்த விபத்து நடந்திருக்கிறது. படகில் காய்கறிகளை ஏற்றி சென்ற விவசாயிகள் இதில் சிக்கியிருக்கிறார்கள். விஷயம் கேள்விப்பட்டவுடன் நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டோம். 2 பேரை காணவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக மேலதிக விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
ஏற்கெனவே இதேபோன்ற படகு விபத்து சம்பவம் நடந்து சில நாட்களுக்குள் தற்போது மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது. மே 9ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையில் 2 பேர் காணாமல் போயினர். இந்த படகில் மொத்தம் 9 பேர் பயணித்திருக்கின்றனர். இதில் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 2 பேரை காணவில்லை.
கடந்த மாதம் இதேபோன்று கந்த்பால் பகுதியில் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. 15 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் இந்த சோக சம்பவம் நடந்தது. இப்படியாக தொடர் விபத்து சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications