சல்லி சல்லியா நொறுங்கிடுச்சே.. பீகாரில் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்! என்னாச்சு?
பாட்னா: பீகாரில் பக்ரா நதிக்கு குறுக்கே கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகி வந்த புதிய மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பீகாரில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அதாவது ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்.

இந்த மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆறுகளுக்கு இடையே உள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பீகாரில் உள்ள அராரியா மாவட்டம் பக்ரா நதிக்கு குறுக்கே பத்கியா காட் எனும் பகுதியில் ரூ.12 கோடியில் மேம்பாலம் என்பது புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் என்பது குர்சகந்தா மற்றும் சிக்தி இடையேயான பயணத்தை எளிதாக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த மேம்பால பணிகள் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக தீவிரமாக நடந்து வந்தது.
தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்காக மேம்பாலம் காத்திருந்தது. இத்தகைய சூழலில் தான் இன்று திடீரென்று இந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது. தற்போது பக்ரா நதியில் தண்ணீர் செல்லும் நிலையில் பாலம் அடித்து செல்லப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
அதாவது புதிதாக கட்டப்பட்ட இந்த இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இன்று திடீரென்று சரிந்தது. அதன்பிறகு அடுத்த சில நிமிடங்களில் அந்த மேம்பலாம் உருக்குலைந்து தண்ணீருக்குள் வுிழுந்தன. இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையே தான் மேம்பாலத்தை ஒப்பந்ததராரர் சரியாக தரமற்ற நிலையில் கட்டியதாகவும், இதனால் பாலத்தின் 3 தூண்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பாலம் இடிந்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுபற்றி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதுபற்றி சிக்தி சட்டசபை தொகுதியின் பாஜக எம்எல்ஏ விஜயகுமார் கூறுகையில், ‛‛கட்டுமான நிறுவனத்தின் அலட்சியத்தால் தான் இந்த மேம்பாலம் இடிந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
பீகாரில் இப்படி பாலம் இடிந்து விழுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் பீகாரில் சுபாலில் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம், கட்டுமானப் பணியின்போதே திடீரென இடிந்து விழுந்தது. அப்போது ஒருவர் பலியான நிலையில் 10 பேர் காயமடந்தனர். இந்நிலையில் தான் தற்போது பீகாரின் அராரியாவில் பக்ரா நதிக்கு குறுக்கே கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்துள்ளது என்பது சோகமான விஷயமாகும்.












Click it and Unblock the Notifications