பீகார் தேர்தல்.. தேஜஸ்விக்கு அண்ணனால் வந்த சிக்கல்.. தேஜ் பிரதாப் ஸ்கெட்ச்
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நிதிஷ் - பாஜக கூட்டணி, தேஜஸ்வி - காங்கிரஸ் கூட்டணி களத்தில் சீறிக் கொண்டிருக்கின்றனர். இன்று நடக்கவுள்ள வாக்கு எண்ணிக்கையை நாடே உற்று கவனிக்கிறது. லாலு பிரசாத்தின் இளைய மகன் தேஸ்வி நிதிஷ் பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்கிறார். ஆனால் தேஸ்வியின் அண்ணன் தேஜ் பிரதாப் தனிக்கட்சி தொடங்கி தேஜஸ்விக்கு எதிராகவே களமாடிக் கொண்டிருக்கிறார். அவரால் தேஜஸ்விக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. சுமார் 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தேசியளவில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அங்கு மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அங்கு கடந்த நவம்பர் 6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தலும், நவம்பர் 11 ஆம் தேதி 122 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.

பீகார் தேர்தல் களம்
கடந்த 75 வருட பீகார் அரசியலில் இல்லாதளவுக்கு 66.91 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிகளவு வாக்களித்துள்ளனர். ஆளும் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறது. மறுபக்கம் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது. மேலும் பிரபல தேர்தல் வகுப்பாளரும், ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோரும் களத்தில் உள்ளார்.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் நிதிஷ் - பாஜக கூட்டணியே மீண்டும் அரியணை ஏறும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2020 சட்டமன்ற தேர்தலை போலவே ஆர்ஜேடி அதிக வாக்கு சதவீதத்துடன் இந்த முறையின் பீகாரின் தனிப்பெரும்பான்மை கட்சி என்ற பெருமையை எட்டும் என்று கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
சகோதரர்கள் யுத்தம்
இதனுடன் பீகார் களத்தில் சகோதரர்கள் இடையே நடக்கும் அதிகார போட்டியும் கவனிக்கப்படுகிறது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தேஜ் பிரதாப், இளைய மகன் தேஜஸ்வி இரண்டு பேருமே தீவிர அரசியலில் இருக்கிறார்கள். தேஜஸ்வி முதலமைச்சர் வேட்பாளர் ரேஸில் இருக்கும் நிலையில், தேஜ் பிரதாப் தன் தந்தையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தேஜ் பிரதாப் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து அரசியலில் இருக்கிறார். இரண்டு முறை எம்எல்ஏ, ஒருமுறை அமைச்சர் பதவியில் இருந்தார். தேஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், குறுகிய காலத்திலேயே அவரின் திருமண வாழ்க்கை முறிந்தது. கடந்த மே மாதம் மற்றொரு பெண்ணுடன் ரிலேசன் ஷிப்பில் இருப்பதாக தேஜ் பிரதாப் அறிவித்தார்.
தேஜ் பிரதாப் Vs தேஜஸ்வி
அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிய லாலு பிரசாத் அவரை கட்சியில் இருந்து நீக்கினார். கடந்த செப்டம்பர் மாதம் அவர் ஜேஜேடி என்ற கட்சியை தொடங்கி , 5 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதாக அறிவித்தார். வைசாலி மாவட்டம் மகுவா தொகுதியில் தேஜ் பிரதாப் போட்டியிட்டுள்ளார். தேஜஸ்வியும் அதே வைசாலி மாவட்டம் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பொதுவாக வைசாலி மாவட்டத்தில் யாதவ, முஸ்லிம், ராஜ்புத், பவன்ஸ் சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கிறார்கள். ரகோபூர் தொகுதியில் தேஜ்வி - பாஜக வேட்பாளர் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தேஜ் பிரதாப் சமுதாய வாக்குகளை பிரிப்பதால் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மேலும் தேஜ் பிரதாப் நிலை என்ன ஆகப்போகிறது என்பதையும் பீகார் மக்கள் உற்று கவனித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications