பீகார் தேர்தலுக்கு பக்கா பிளான்.. குஜராத் மாடல் யுக்தியுடன் களமிறங்கும் பாஜக! வெற்றி சாத்தியமா?
பாட்னா: பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இருப்பதால், பாஜகவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இதில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி அதிக எம்எல்ஏக்களை வென்றது. அதை தொடர்ந்து, பாஜகதான் கெத்து காட்டியது. எனவே, இந்த முறையும் அதிக எம்எல்ஏக்களை வெல்ல திட்டமிட்டிருக்கிறது. இதற்காக குஜராத் மாடல் யுக்தியை கையில் எடுத்திருக்கிறது பாஜக.

பாஜகவுக்கு இருக்கும் நெருக்கடி
தற்போது பீகாரில் பாஜகவுக்கு 80 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்றுக்கொண்டிருப்பதால் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு கட்சி உள்ளாகியுள்ளது. முதல் விஷயம் கடந்த 2005 முதல் நிதிஷ்குமார் முதல்வராக இருப்பதுதான். நீண்ட காலமாக ஒருவர் முதல்வராக இருக்கும்போது, அவர் மீது இயல்பாகவே மக்களுக்கு அதிருப்தி இருக்கத்தான் செய்யும். எனவே நிதிஷ் முகத்தை மட்டும் காட்டி, வெற்றியை பெற்றுவிட முடியாது. புதிய முகங்களை கட்சி களமிறக்க திட்டமிட்டிருக்கிறது.
புதிய முகங்கள்
இது குறித்து உள்ளூர் பாஜக தலைவர்கள் கூறுகையில், "பல்வேறு பிரிவினரை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டங்களை நிதிஷ் அறிவித்திருப்பது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளன. ஆனால், தற்போதைய எம்எல்ஏக்கள் மீதான வாக்காளர்களின் அதிருப்தி தடையாக இருக்கும்" எனவேதான் வேட்பாளர்களை பாஜக மாற்ற இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற வேட்பாளர்களை இறுதி செய்யும் பாஜகவின் முக்கிய குழு கூட்டத்தில், குஜராத் மாடலை செயல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. 2022 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் குஜராத்தில் பாஜக தனது முழு அமைச்சரவையையும் மாற்றியது. மேலும், 108 எம்எல்ஏக்களில் 45 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கூட வாய்ப்பை இழந்தனர்
இதற்கு முன், 2019-ல் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக சத்தீஸ்கரில் தனது அனைத்து எம்.பி.க்களையும் பாஜக மாற்றியது. இந்த இரண்டு முறையும் பாஜகவின் இந்த உத்தி வெற்றி பெற்றது. குஜராத் அளவில் மாற்றங்கள் இப்போது சாத்தியமில்லை என்றாலும், புதிய முகங்களை வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை என்று உள்ளூர் பாஜக தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய அழுத்தம்
பாஜகவின் பீகார் தேர்தல் பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார். இந்த முறை பீகாரில் 101-104 தொகுதிகளில் போட்டியிட பாஜக விரும்புவதால், தற்போதைய சில எம்எல்ஏக்களை நீக்கிவிட்டு, வெற்றி வாய்ப்புள்ள பல புதிய வேட்பாளர்களை கண்டறிய வேண்டும் என்பதால் கட்சிக்கு கடும் அழுத்தம் இருப்பதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
அதிருப்தி குறித்து அச்சம்
வழக்கமாக வயதை காரணம் காட்டி மற்ற மாநிலங்களில் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு பாஜக சீட் மறுத்திருந்தது. ஆனால் பீகாரில் அம்ரேந்திர பிரதாப் சிங் மற்றும் சி.என். குப்தா போன்ற ஒரு சில எம்எல்ஏக்கள் மட்டுமே 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுக்க வயது ஒரு பெரிய காரணமாக இருக்காது. மேலும், பீகார் குஜராத் போன்றது அல்ல. பீகாரில் பாஜகவுக்கு முழுமையான ஆதிக்கம் இல்லை, அதேபோல் கட்சிக்கு வலுவான போட்டியாளர்கள் கொண்ட மாநிலம் இது. எனவே அவசரப்பட்டு மூத்த தலைகளை நீக்கிவிட்டால், அதிருப்தி அடைந்த தலைவர்கள் கட்சிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தலாம்.
கர்நாடகாவில் அப்படித்தானே நடந்தது. சீட் மறுக்கப்பட்ட பலர் கிளர்ச்சியாளர்களாக மாறி, எதிரணிகளில் சேர்ந்து கட்சியின் வாக்கு வங்கியை பதம் பார்த்ததை பாஜக இன்னும் மறக்கவில்லை.
உள்ளூர் தலைமை
அதேபோல, கட்சியின் வேட்பாளர்களை மாற்ற பாஜகவுக்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. சமீப நாட்களில், ஜன சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர், பீகாரில் உள்ள சில பாஜக மூத்த தலைவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார். துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஒரு கொலை வழக்கில் தனது வயது குறித்து பொய் சொன்னார் என்ற குற்றச்சாட்டும் இதில் அடங்கும். இதனால் பாஜக சிக்கல்களை சந்தித்துள்ளது. கட்சி ஒரு புதிய கதையை சொல்ல வேண்டும். அதற்கான வழி நம்பகமான மற்றும் புதிய முகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் என கட்சி மேலிடம் நம்புகிறது.
ராகுல் காந்தி, பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை அடுக்கியிருந்தாலும், தேஜஸ்வி யாதவ் போன்ற உள்ளூர் முகங்களை எதிர்கொள்ள கட்சிக்கு வலுவான ஆட்கள் தேவை. எனவே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை முன்னிறுத்துவதை விட உள்ளூர் தலைமையை முன்னிறுத்த வேண்டும் என்று கட்சி திட்டமிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications