திடீர் திருப்பம்.. சுஷாந்த் சிங் தற்கொலை பின்னணியில் சல்மான் கான்.. நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
பாட்னா: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பின்னணியில் முன்னணி நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த 8 பேர் இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து, இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகம் முழுக்க கவனம் ஈர்த்தவர் பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத், சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் பிரேத பரிசோதனை
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூக்குக் கயிறு இறுகியதால் மூச்சு திணறி சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்திருந்தது.

ரசிகர்கள் அதிர்ச்சி
தற்கொலை முடிவுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய திரைப்படத்தில் கூட நடித்தவர்தான் சுஷாந்த் சிங் ராஜ்புத். அப்படிப்பட்டவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற கேள்வி அவரது ரசிகர்களை துளைத்து எடுத்தது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஹேஷ்டேக் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

வழக்கு தாக்கல்
இந்த நிலையில் திடீர் திருப்பமாக வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் பிரபல நடிகர் சல்மான்கான், பிரபலங்களான, கரன் ஜோகர், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார். ஐபிசி சட்டப்பிரிவு 306, 109, 504, 506 ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா தெரிவித்துள்ளார்.

7 படங்களில் நீக்கம்
சல்மான்கான் உள்ளிட்டோரின் அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் சுமார் 7 படங்களில் இருந்து நீக்கப்பட்டதாகவும், தொடர்ச்சியாக பட வாய்ப்பு கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வழக்கறிஞர் சுதிர்குமார் குற்றம்சாட்டி உள்ளார். இந்த விவகாரத்தில் சல்மான் கான் பெயர் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications