பாஜகவுக்கு மொத்தம் “3 மகன்கள்”.. பணியாவிட்டால் அவர்கள் ஏவப்படுவார்கள்! தேஜஸ்வி சரமாரி அட்டாக்
பாட்னா: பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், பேசிய அம்மாநில துணை முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய 3 மகன்கள் பாஜகவுக்கு உள்ளதாக கூறியுள்ளார்.
பீகாரில் பாரதிய ஜனதா கட்சி உடனான கூட்டணியில் இருந்து விலகிய நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில், இந்த புதிய கூட்டணி அரசு இன்று பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இன்று மத்திய புலனாய்வுத்துறை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்பி மற்றும் எம்.எல்.சி வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது.

ரயில்வே குடியிருப்பு வழக்கு
கடந்த 2004 முதல் 2009 வரை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மத்திய ரயில்வே துறை அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்து வந்தார். அப்போது பணியாளர்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சிபிஐ ரெய்டு
இந்த வழக்கு தொடர்பாக பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அஹ்மத் அஷ்ஃபாக் கரீம் மற்றும் பீகார் மாநில சட்டமேலவை உறுப்பினர் சுனில் ஆகியோர் வீடுகளில் இன்று சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது.

ரெய்டு ரெடி
இன்று காலை இருவரது வீடுகளுக்கும் சென்ற சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்றிரவு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர், "பீகாரில் அதிகாரத்தை இழந்த பாரதிய ஜனதா கட்சி கோபத்தில் இருக்கிறது. எனவே சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து சோதனைகளை மேற்கொள்ள தயாராகி வருகிறது." என்று ட்விட்டரில் பதிவிட்டார்.

மேலும் 25 இடங்கள்
இந்த நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக டெல்லி, அரியானா மாநிலம் குருகிராம், பீகார் தலைநகர் பாட்னா, கதிஹார், மதுபானி ஆகிய பகுதிகளில் உள்ள 25 இடங்களில் சோதனையை சிபிஐ விரிவுபடுத்தி இருக்கிறது. சிபிஐ நடத்தி வரும் இந்த சோதனை உள்நோக்கம் கொண்டது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நாளில் எம்.எல்.ஏக்களை மிரட்டும் வகையில் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் எம்.எல்.சி. சுனில் சிங் கூறியுள்ளார்.

தேஜஸ்வி யாதவ்
இதற்கிடையே பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீது அம்மாநில துணை முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய 3 மகன்கள் பாஜகவுக்கு உள்ளதாக கூறியுள்ளார். பாஜகவிடம் பணியாத, விலைபோகாத கட்சிகளை நோக்கி இந்த மூன்று ஏவப்படும் என்று அவர் கூறினார். நிதீஷ் குமார் உடனான கூட்டணியில் அற்புதங்கள் செய்வோம் என்றும், இது நீண்ட கால கூட்டணியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications