நெருங்கும் பீகார் சட்டசபை தேர்தல்.. இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
பாட்னா: பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். விரைவில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதத்தில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல் காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்க வாய்ப்புள்ளது. இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதற்கிடையே தான் இன்று இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இ துகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‛‛ ஓட்டளிக்க தகுதிவாய்ந்த அனைத்து மக்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும். அவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. தகுதியற்ற வாக்காளர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படக்கூடாது என்பதையும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவது போன்ற நடைமுறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவான நகரமயமாக்கல், அடிக்கடி இடம்பெயர்வு, 18 வயது நிரம்பி இளைஞர்கள் வாக்குரிமை பெறுவது, இறப்புகள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படாமல் இருப்பது மற்றும் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டினரின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறுவது போன்ற பல்வேறு காரணங்களால், வாக்காளர் பட்டியலைத் தீவிரமாகச் சீரமைக்க வேண்டும். பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை உறுதி செய்ய வேண்டும்.
முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, தேர்தல் பதிவு அதிகாரிக்கு (Electoral Registration Officer - ERO) எந்த ஆவணங்களின் அடிப்படையில் திருப்தி ஏற்பட்டதோ, அந்த ஆவணங்களையும் ECINET-ல் பதிவேற்றம் செய்வது அவசியம். இது தற்போதைய தொழில்நுட்பத்தின் மூலம் சாத்தியமாகும். அதேவேளையில் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பு கருதி, இந்த ஆவணங்கள் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே கிடைக்கும்.
ஏதேனும் அரசியல் கட்சியோ அல்லது வாக்காளரோ ஆட்சேபனை தெரிவித்தால், உதவி தேர்தல் பதிவு அதிகாரி (Assistant Electoral Registration Officer - AERO) தேர்தல் பதிவு அதிகாரியின் திருப்திக்கு வருவதற்கு முன்பு அது குறித்து விசாரிப்பார். மேலும், சட்ட பிரிவு 24-ன் கீழ், தேர்தல் பதிவு அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குச்சாவடி நிலை முகவர்களை (Booth Level Agents - BLAs) நியமிப்பதன் மூலம், இந்தச் செயல்பாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகப் பங்கேற்க தேர்தல் ஆணையம் விரும்புகிறது. வாக்குச்சாவடி நிலை முகவர்களின் தீவிர பங்கேற்பு, ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், அவை தொடக்கத்திலேயே கண்டறிந்து சரிசெய்தல் உள்ளிட்டவற்றுக்கு இது வழிவகுக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி தோற்றது. இந்நிலையில் தான் போலி வாக்காளர்கள் அதிகம் சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதால் தான் பாஜக வென்றதாக தெரிவித்து வருகிறார். இதனை தேர்தல் ஆணையம் மறுத்துள்ள நிலையில் ராகுல் காந்தி விடவில்லை. இப்படியான சூழலில் தான் பீகார் சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல ்திருத்தம் தொடர்பாக முக்கிய உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications