ஆண்களுக்குள் திருமணம்.. குழந்தைக்கு என்ன செய்வீங்க? பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கேள்வியால் சர்ச்சை
பாட்னா: ஒரு ஆண் மற்றொரு ஆணை திருமணம் செய்தால் எப்படி குழந்தை பிறக்கும்? என பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் புதிதாக அமைக்கப்பட்ட மகளிர் விடுதியை அம்மாநில முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், நாட்டில் நிலவி வரும் வரதட்சனை முறைக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். "எங்கள் காலத்தில் எல்லாம் மகளிருக்கு என்று தனியாக கல்லூரிகள் இருக்காது. அதை நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன்.
ஆனால் இன்றோ, பெண்கள் மருத்துவம், பொறியியல் என அனைத்து வகையான துறைகளிலும் இருக்கின்றனர். பெண்களுடைய மேம்பாட்டுக்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறோம். நாங்கள் வரதட்சனைக்கு தடை விதித்தோம்.
வரதட்சனை திருமண முறைக்கு எதிராகவும் குழந்தை திருமணத்துக்கு எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டோம். ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்காக அவரிடம் வரதட்சனை பெறுவதை விட மோசமானது வேறு எதுவும் இல்லை.
திருமணம் செய்தால் மட்டுமே குழந்தைகள் பிறக்கும். ஒரு ஆண் இன்னொரு ஆணை திருமணம் செய்துகொண்டால் எப்படி குழந்தை பிறக்கும்? நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். வரதட்சனை வாங்கவில்லை என அறிவிக்கப்பட்ட திருமண நிகழ்வுகளுக்கு மட்டுமே செல்வேன் என்று." எனக் கூறினார்.
வரதட்சனை குறித்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் கருத்துக்கு மகளிர் அமைப்புகள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும், ஆண்களுக்கு இடையே நடைபெறும் திருமணங்களை விமர்சிக்கும் வகையில் அவர் எழுப்பிய கேள்வி LGBTQ ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications