இனி எங்கேயும் போக மாட்டேன்.. பாஜக ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றதும் நிதிஷ் சொன்னதை பாருங்க
பாட்னா: பீகாரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கையோடு மீண்டும் பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் முதல்வராக பொறுப்ப்பேற்றுக்கொண்டார். முதல்வராக பொறுப்பேற்றதும் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், நான் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்து விட்டேன். இனி எங்கேயும் செல்வதற்கான கேள்வியே இல்லை என்று கூறியுள்ளார்.
பீகாரில் கடந்த 2020 சட்டமன்ற தேர்தலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து நிதிஷ் குமார் தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் பாஜக 78 தொகுதிகளிலும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 45 தொகுதிகளையும் வென்றது. அங்கு மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். பாஜகவை விட குறைந்த இடங்களில் வென்றாலும் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி கிடைத்தது.

எனினும் கடந்த 2022 ஆம் ஆண்டு திடீரென பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இதன்படி முதல்வராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் இருந்து வந்தனர். இதற்கிடையில் மத்தியில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதிஷ்குமார் ஈடுபட்டார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்: முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டமும் பாட்னாவில்தான் நடைபெற்றது. இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய நிதிஷ்குமாரை காங்கிரஸ் கட்சி ஓரம் கட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த நிதிஷ் குமார் பீகாரில் மகாபந்தன் கூட்டணியில் இருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தான் இன்று காலை எதிர்பார்த்தது போலவே பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார் மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றார். நிதிஷ் குமார் ரஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி கையோடு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
எங்கு இருந்தேனோ அங்கேயே: அந்த வகையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இதோடு முடிந்து போகும் என்று விமர்சித்தார். முதல்வராக பதவியேற்றதும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதிஷ் குமாரிடம் தேஜஸ்வி யாதவின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு நிதிஷ் குமார் அளித்த பதில் வருமாறு:-
பீகார் வளர்ச்சிக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். தொடர்ந்து வளர்ச்சிக்கான பணிகளை செய்ய இருக்கிறோம். வேறு எதையும் செய்யப்போவது இல்லை. தேஜஸ்வி எதையுமே செய்யவில்லை. நான் ஏற்கனவே எங்கு இருந்தேனோ (தேசிய ஜனநாயக கூட்டணி) அங்கேயே வந்து இருக்கிறேன். தற்போது வேறு எங்கேயும் போவேன் என்ற கேள்வியே இல்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications