பீகார் தேர்தல்.. சீனிலேயே இல்லாத நிதிஷ்.. மோடி vs ராகுல் இடையே கடும் போட்டி! வெளியான புதிய சர்வே
பாட்னா: பீகார் தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அங்குள்ள 27.4%க்கும் அதிகமான தலித் வாக்காளர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளனர். மேலும், அங்குள்ள பட்டியல் சாதியினரில் சுமார் 58%க்கும் அதிகமானோர் வேலையில்லாத் திண்டாட்டமே வரவிருக்கும் தேர்தலில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் என்று கருதுகின்றனர்.
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. அங்கு நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு- பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இந்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்குத் தேர்தல் களம் இப்போதே மெல்லச் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.

பீகார் தேர்தல் சர்வே
பீகார் தேர்தலை முன்னிட்டு அங்குப் பல்வேறு சர்வேக்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே தேசிய தலித் மற்றும் ஆதிவாசி கூட்டமைப்பான NACDAOR பீகார் தேர்தலை முன்னிட்டு ஒரு விரிவான ஆய்வை நடத்தியிருக்கிறது. இந்த NACDAOR என்பது நாடு முழுவதும் உள்ள பல நூறு சங்கங்களின் கூட்டமைப்பாகும். இந்தக் கூட்டமைப்பு அங்குள்ள தலித்துகளிடையே சர்வே ஒன்றை நடத்தியுள்ளது.
2022ஆம் ஆண்டு பீகார் சாதிவாரி கணக்கெடுப்பின்படி, அங்கு மக்கள் தொகையில் 19.65% பட்டியல் சாதியினராக உள்ளனர். இதனால் தலித் பிரிவு மக்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் 10 முதல் ஜூலை 4 வரை பீகார் முழுக்க நடத்தப்பட்ட ஆய்வில் சில விஷயங்கள் நமக்கு தெளிவாக தெரிய வருகிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சிறப்புச் சீர்திருத்த நடவடிக்கை
பீகாரில் தேர்தல் ஆணையம் இப்போது சார் எனப்படும் சிறப்புச் சீர்திருத்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையால் புதிய வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்படும் என நீங்கள் அஞ்சுகிறீர்களா என்ற கேள்விக்கு, 71%க்கும் அதிகமானோர் ஆம் என்று பதிலளித்துள்ளனர். வெறும் 23.4% பேர் இல்லை என்று பதிலளித்தனர். அதேபோல சுமார் 5% பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றிச் செயல்படுமா என்ற பொதுவான கேள்விக்கு 27%க்கும் அதிகமானோர் இல்லை என்றும், சுமார் 51% பேர் ஆம் என்றும், 21% பேருக்குத் தெரியாது என்றும் பதிலளித்தனர். மேலும், பீகாரில் எது முக்கிய பிரச்சனையாக இருக்கும் என்ற கேள்விக்கு 58% தலித் மக்கள் வேலைவாய்ப்பின்மையே முக்கிய பிரச்சனை எனக் கூறியுள்ளனர்.
பிடித்த அரசியல் தலைவர்
இந்த சர்வேயில் தேசிய மற்றும் மாநில அளவில் உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசின் செயல்பாடு எப்படி உள்ளது, சாதிவாரி கணக்கெடுப்புக்கு யார் காரணம் என்பது போன்ற 11 கேள்விகள் கேட்கப்பட்டன. தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடிதான் தங்களுக்குப் பிடித்த தலைவர் என்று 47.5%க்கும் அதிகமானோர் கூறியுள்ளனர். 40.3% பேர் ராகுல் காந்தியை ஆதரிப்பதாகவும், சுமார் 12% பேர் மற்ற அரசியல்வாதிகளை விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு
சாதிவாரி கணக்கெடுப்பிற்கு யார் காரணம் என்ற கேள்விக்கு, 33.15% பேர் நரேந்திர மோடியையும், 30.81% பேர் ராகுல் காந்தியையும், 27.57% பேர் பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவையும் குறிப்பிட்டனர். சுமார் 8% பேர் மற்ற அரசியல்வாதிகளின் பெயர்களைக் கூறினர். மேலும், நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் செயல்பாடு "மோசமாக" இருப்பதாக 48% பேரும், "நல்லது" என்று சுமார் 45% பேரும் தெரிவித்தனர்.
இந்த சர்வே குறித்துக் கூட்டமைப்பின் தலைவர் பாரதி தி இந்துவிடம் கூறுகையில், "பட்டியல் சாதியினரைப் பற்றி நிறையப் பேர் ஆய்வு செய்வதாகச் சொல்கிறார்கள். ஆனால், களத்தில் மக்களிடம் சென்று பேசுவது அரிது. இந்த ஆய்வு தலித்துகளால், தலித்துகளுக்காக நடத்தப்பட்டது. நாங்கள் களத்தில் இறங்கி மக்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்தோம். நாங்கள் ஆய்வு நடத்திய போது இடையில் சார் நடவடிக்கை வந்தது. இதனால் அந்தக் கேள்விக்கு மட்டும் அனைவரிடமும் விடை பெற முடியவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications