நிதிஷ் குமார் தான் பிரதமர் ஆகனும்! மக்கள் விரும்புறாங்க! ஜேடியூ கட்சி நிர்வாகி பேச்சு.. அதிரும் பாஜக
பாட்னா: நிதிஷ் குமாரை விட சிறந்த பிரதமர் யார் இருக்க முடியும்? நிதிஷ் குமார் இந்த நாட்டையும் சமூகத்தையும் புரிந்து கொள்ளும் அனுபவம் மிக்க அரசியல்வாதி. இப்போது சரி.. முன்பும் சரி நிதிஷ் குமார் பிரதமராக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என நிதிஷ் குமார் கட்சி எம்.எல்.சி காலித் அன்வர் தெரிவித்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 288 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக தனியாக 240 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்படுகிறது. தனி மெஜாரிட்டி பெற பாஜகவிற்கு 40 இடங்களுக்கு மேல் இன்னும் கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே கருதப்படுகிறது.
பாஜகவிற்கு தனியாக மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் அவர்கள் ஆட்சி அமைப்பது கடினம். ஏனென்றால் மோடி பிரதமர் ஆவதற்கு என்டிஏ கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்காமல் போகலாம். உதாரணமாக நிதிஷ் குமாரின் ஜேடியூ பீகாரில் 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்தில் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இவர்கள் என்டிஏ கூட்டணிதான். ஆனாலும் மோடியுடன் அத்தனை நெருக்கம் இல்லை. பாஜகவை ஆதரித்தாலும் மோடியை தனிப்பட்ட வகையில் கடுமையாக எதிர்க்க கூடியவர்கள். சந்திரபாபு நாயுடு எல்லாம் ஒரு காலத்தில் கடுமையாக மோடியை எதிர்த்தவர். இப்படிப்பட்டவர்கள் மோடி பிரதமராவதை எதிர்க்கலாம்.
ஏன் சில சமயங்களில் என்டிஏ கூட்டணியை உடைத்துவிட்டு இந்தியா கூட்டணிக்கு கூட செல்லலாம். இன்னும் சொல்லப்போனால் நிதிஷ் அல்லது சந்திர பாபு நாயுடு பிரதமராக முன்னிறுத்தப்பட்டு இந்தியா கூட்டணி கூட ஆட்சி அமைக்கலாம். இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் என்டிஏ கூட்டணிகள் உதவியுடன் ஆட்சி அமைக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில் தான், நிதிஷ் குமார் கட்சி எம்.எல்.சி காலித் அன்வரிடம் தற்போதைய அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த காலித் அன்வர், "நிதிஷ் குமாரை விட சிறந்த பிரதமர் யார் இருக்க முடியும்? நிதிஷ்குமார் இந்த நாட்டையும் சமூகத்தையும் புரிந்து கொள்ளும் அனுபவம் மிக்க அரசியல்வாதி. ஜனநாயக அமைப்புகளை நிதிஷ்குமார் மதிக்கிறார்.
தற்போதைக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம். இப்போது சரி.. முன்பும் சரி நிதிஷ் குமார் பிரதமராக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது" என்றார். நிதிஷ் குமார் கட்சியை சேர்ந்த நிர்வாகியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications