வியூகம் போட்ட நிதிஷ்குமார்.. வீணாய் போன உழைப்பு! பீகார் நிலவரம் எப்படி இருக்கு? விவரம்
பாட்னா: பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. முதலமைச்சராக இருக்கும் நிதிஷ்குமார், பதவியை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்து களமாடி வருகிறார். ஆனால் அது எல்லாமும் கைகொடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பீகார் தேர்தலில் பெண்களின் வாக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது பீகாரில் ஆண்களில் 53% மட்டுமே வாக்களித்தனர். இதுவே பெண்களில் 59.45 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். எனவே பெண்களின் வாக்கு வங்கியை கவரும் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி உறுதி. அந்த வகையில் பெண்களை மையப்படுத்தி பல்வேறு நலத்திட்டங்களை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்து வந்தார். மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை இலவச சைக்கிள் ஆகிய அறிவிப்புகள் சாதி, மத வேறுபாடு இன்றி பெண்களின் வாக்கு வங்கியை அதிகரித்தது.

தேர்தல் வியூகம் வகுத்த நிதிஷ்குமார்
இந்த வியூகம் தேர்தலுக்கு கை கொடுப்பதாக இருந்தாலும், இது மட்டுமே வெற்றிக்கு முழுமையாக பயன்படாது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது நிதீஷ் குமாரின் கட்சியின் வாக்கு சதவீதம் 2005 சட்டமன்ற தேர்தலை காட்டிலும் கடந்த 20 ஆண்டுகளில் கணிசமாக குறைந்து இருக்கிறது.
கடந்த 2005-ல் 20 சதவீதத்திற்கும் அதிகமாக நிதிஷ்குமாரின் கட்சி வாக்குகளை பெற்றிருந்தது. 2010ல் பாஜக உடன் கூட்டணி வைத்தபோது வாக்குகள் 22.58% ஆக அதிகரித்தன. ஆனால், 2015 ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்தபோது, 16.8 சதவீதமாக வாக்குகள் குறைந்தது. அதுவே 2020 ஆம் ஆண்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்த போது 15.39 சதவீதமாக வாக்குகள் குறைந்தன. தொகுதி வாரியாக பார்த்தால் 2010 ஆம் ஆண்டு 115 இடங்களில் வெற்றி பெற்ற நிதிஷ்குமார் கட்சி. 2015 ஆம் ஆண்டு 71 இடங்களிலும், 2020 ஆம் ஆண்டு 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் பலம்
இந்த வாக்கு வங்கி குறைவுக்கு நிதிஷ்குமாரின் கட்சி தாவல் மிக முக்கியமான காரணமாக இருந்தது. பீகாரில் நிதிஷ்குமார் 'பல்டு ராம்' என்று அழைக்கப்படுகிறார். அடிக்கடி கட்சி தாவுபவர் என்று இதற்கு அர்த்தம்.
நிதீஷ் குமாருக்கு போட்டியாக இருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம், பாரம்பரியமாக முஸ்லிம் மற்றும் யாதவ் வாக்கு வங்கியை தனக்காக வைத்திருக்கிறது. ஆனாலும் இது மட்டுமே வெற்றிக்கு போதாது. இதை உணர்ந்த கட்சி தலைமை, மாயாவதியின் சூத்திரத்தை கையில் எடுத்திருக்கிறது. அதாவது பிற சமூகங்களை சேர்ந்த வேட்பாளர்களையும் களத்தில் இறக்குவது, இதன் மூலம் அனைத்து சமூக வாக்குகளையும் பெறுவது என்பதுதான் இந்த யுக்தி. கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்த யுக்தியை பின்பற்றி ராஷ்டிரிய ஜனதா தளம், குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியை பெற்றிருந்தது.
இந்த தேர்தலில் 22.14 சதவீதம் வாக்குகளை பெற்று, பீகாரில் அதிக வாக்கு சதவீதத்தை கொண்டிருக்கும் கட்சி என்கிற அந்தஸ்தையும் அடைந்தது. இருப்பினும் இரு தரப்பிலும் சில பின்னடைவுகள் இருப்பதாக தேர்தல் ஆய்வாளரான அமிதாப் திவாரி பிரண்ட்லைன் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இரு கட்சிகளின் பலவீனம் என்ன?
குறிப்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முஸ்லிம்-யாதவ் வாக்கு வங்கி கொஞ்சம் பலவீனமடைந்திருக்கிறது. அதிலும் இக்கட்சியின் சின்னமான லாந்தர் விளக்கு, காலாவதியான விஷயங்களை நினைவுப்படுத்துவதாகவும், வளர்ச்சியின் சின்னமாக இல்லாம் இருப்பதாகவும் அமிதாப் திவாரி கூறியிருக்கிறார். எதிர் தரப்பில் பார்த்தால், நிதிஷ்குமார் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வாக்குகளை ஒன்று சேர்த்திருக்கிறார்.
இதுதவிர, பாஜகவுடன் கூட்டணி இருப்பதால் குஷ்வாஹா-கோய்ரி போன்ற ஓபிசி சமூகத்தினரும் வாக்குகளும் கிடைக்கும். சிராக் பஸ்வான் துசாத்/பஸ்வான் வாக்குகளை ஈர்க்கிறார். ஜிதன் ராம் மாஞ்சி மகாதலித் வாக்குகளைப் பெறுகிறார். இதன் மூலம் நிதிஷ்குமார் பலமானவராக இருக்கிறார்.
வெற்றி யாருக்கு?
இருப்பினும், அரசியலில் கடந்த 20 ஆண்டுகளாக முதலமைச்சராக நீடிக்கும் நிதிஷ்குமார் மீது இயல்பாகவே அதிருப்திகள் இருக்கின்றன. கடந்த மார்ச் 16 அன்று சம்பாரணில் உள்ள பிதிஹார்வா ஆசிரமத்தில் இருந்து காங்கிரஸ் பேரணி ஒன்றை தொடங்கியிருந்தது. வேலை கொடு என்கிற முழக்கத்தை முன்வைத்து தொடங்கப்பட்ட யாத்திரை குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications