ஏங்க அவரு செத்துட்டாருங்க! இறந்து போன தாசில்தார்.. 100 கோடி சொத்தை ஆட்டைய போட்ட கும்பல்!
பெரம்பலூர்: இறந்து போன தாசில்தார் ஆணை வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை கைப்பற்ற திட்டம் தீட்டிய மாபியா கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பாலக்கரை பின்புறம் பகுதியில், நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, இறந்து போன தாசில்தார் வழங்கியது போன்று, போலி ஆவணங்கள் தயார் செய்து சொத்துக்களை கைப்பற்ற திட்டம் தீட்டிய மாஃபியா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நில உரிமையாளர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில்," பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் பாலக்கரை பகுதியில் பின்புறம், ஒன்பது புள்ளி ஆறு ஏக்கர் பரப்பளவு நிலம் மற்றும் அதில் கட்டிடம் உள்ளது.

இதில் பெரம்பலூரைச் சேர்ந்த அப்துல் ஹமீது, அரவிந்த், சுப்பிரமணி, செல்லம்மாள், சின்னசாமி, திருஞானமூர்த்தி, ராஜேந்திரன், கலைச்செல்வி, நல்லதம்பி என மொத்தம் 16 பேருக்கு சொந்தமான, சுமார் 100 கோடிக்கு மேல் மதிப்பிலான நிலங்கள் மற்றும் கட்டிடங்கள், உரிமையாளர்கள் பெயரில் முறையான ஆவணம் இருந்து வந்தது.
இந்த நிலையில், தற்பொழுது, கோயம்புத்தூர் பீளமேடு பகுதியைச் சேர்ந்த, ஆறுமுகம் மகன் பரமசிவம் மற்றும் சேலம் மாவட்டம் கோவிந்தப்பாளையத்தைச் சேர்ந்த செல்ல துரை மனைவி வள்ளி, ஆகியோர்,
அந்த நிலங்களின் வாரிசுதாரர் என்று கடந்த ஜனவரி மாதம் இறந்து போன தாசில்தார் (செல்வராஜ்) வாரிசு சான்றிதழ் கொடுத்தது போன்று, போலியான ஆவணங்களை தயார் செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் பாலக்கரை பகுதியில் உள்ள 9.6 ஏக்கர் நிலத்தின் பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக மனு தாக்கல் செய்தனர்.
நீதிமன்ற உத்தரவின் படி பெரம்பலூர் தாசில்தார், நில உரிமையாளர்களை நேரில் அழைத்து விசாரணை செய்து ஆய்வு செய்ததில், பரமசிவம், வள்ளி ஆகியோர் போலியான ஆவணங்கள் தயார் செய்து நிலத்தை அபகரிக்க திட்டம் தீட்டியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து நில உரிமையாளர்கள் 16 பேரும் தங்களது வழக்கறிஞர் மூலம் போலியான ஆவணங்கள் தயார் செய்து தங்கள் நிலத்தை மோசடியாக அபகரிக்க செயல்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்திலும், அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளனர், மனுவின் பேரில் போலி ஆவணங்கள் தயார் செய்து நிலத்தை அபகரிக்க திட்டம் தீட்டியவர்கள் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நில உரிமையாளர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் மைய பகுதியில் நூறு கோடிக்கு மேல் மதிப்பிலான சொத்துக்களை போலி ஆவணம் தயார் செய்து அபகரிக்க திட்டம் தீட்டிய செயல் அப்பகுதி நில உரிமையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications