சினிமா பாணியில் போலீஸ் அதிரடி சேஸிங்.. துப்பாக்கியால் காரை சுட்டு இருவர் கைது.. கஞ்சா பறிமுதல்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கஞ்சா கடத்தி சென்ற கார் ஒன்றின் மீது போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி மிகப்பெரிய அளவிலான பல கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சா பொட்டலங்களை, ஒரு கும்பல் ஆந்திராவிலிருந்து காரில் கடத்தி கொண்டு பெரம்பலூர் அருகே வந்து கொண்டிருக்கிறது.

விரைந்து சென்றால் அவர்களை தடுத்து நிறுத்தி, பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்யலாம் என போலீஸாருக்கு மர்ம நபர் தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து உஷாரான பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர், மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக கூறப்பட்ட கார் வந்தது இதனையடுத்து அந்த காரை மறித்து நிறுத்த முயன்றனர் காவல்துறையினர்.
ஆனால் அந்த கார் டிரைவரோ போலீஸை கண்டதும் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியபடி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக காரை சினிமா பாணியில் விடாமல் விரட்டி சென்றனர்.
பின்னர் சிறிது தூரம் சென்ற பிறகு கார் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஒரு பக்கம் காரின் டயரை குறி பார்த்து சுட்ட போலீஸார், மறுபக்கம் கடத்தல் கார் மீது தங்களது வாகனத்தை மோதி சாதுர்யமாக தடுத்து நிறுத்தினர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நடத்திய இந்த அதிரடி துரத்தலின் இறுதியில், காரில் கஞ்சா கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை காரிலிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
சினிமா காட்சிகளில் வரும் சம்பவங்களை போல பெரம்பலூரில் காவல்துறையினர் நடத்திய சேஸிங் காரணமாக, சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications