முன்பெல்லாம் ஒன்றாக பண்டிகை கொண்டாடுவோம்... இன்றைய சூழல் முன்பு இல்லை -பிரதமரின் நண்பர் அப்பாஸ்
கேன்பெரா: பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டில் சிறுவயதில் ஒரு வருடம் தங்கி இருந்ததாகவும் இன்று நிலவி வரும் சூழல் அன்று என்றும் இருந்ததில்லை என அவரது நண்பர் அப்பாஸ் தெரிவித்து இருக்கிறார்.
தனது தாயார் ஹீராபாயின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தனது சிறுவயது நினைவுகள் குறித்தும் தனது தாய் ஹீராபாய் பற்றியும் நெகிழ்ச்சியோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதில், "எனது தந்தையுடைய முஸ்லிம் நண்பர் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டார். அவரது மகன் பெயர் அப்பாஸ். அப்பாஸை எனது தந்தை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

மோடியின் முஸ்லிம் நண்பர்
அப்பாஸ் எங்கள் வீட்டில்தான் தங்கி படித்தார். என் அம்மா என்னிடமும், என் சகோதர சகோதரிகளிடமும் அன்பு காட்டுவதை போன்றே அப்பாஸிடமும் அன்போடு இருந்து அவரை வளர்த்தார். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகையின்போது அப்பாஸுக்கு பிடித்தமான பலகாரங்களை என் தாயார் செய்து கொடுப்பார்." என்று தெரிவித்து இருந்தார்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அப்பாஸ்
இந்த நிலையில்தான் குஜராத்தை சேர்ந்த பத்திரிகையாளர் தீபல் திரிவேதி அப்பாஸ் குறித்த தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தார். அதன்படி அப்பாஸ் குஜராத் அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் பணிபுரிந்திருக்கிறார். அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு குடிபெயர்ந்து சென்றுள்ளார் அப்பாஸ்.

அப்பாஸ் பேட்டி
இந்த நிலையில் அப்பாஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை உறுதிபடுத்தி இருக்கிறார். எனது தந்தையும், நரேந்திர மோடியின் தந்தையும் நெருங்கிய நண்பர்கள். என் தந்தை உயிரிழந்த பின்னர் ஒரு ஆண்டு மோடியின் வீட்டில் தங்கி இருந்தேன். அங்கு இருந்துகொண்டே எனது மெட்ரிகுலேசன் தேர்வுக்கு தயாரானேன்.

சூழல் மாறிவிட்டது
ஈத் பெருநாள் நேரத்தில் நரேந்திர மோடியின் தாய் எனக்கு சேமியா செய்து தருவார். இன்று நிலவி வரும் சூழல் அன்று எப்போதுமே இருந்தது கிடையாது. அப்போது அனைவரும் அனைத்து பண்டிகைகளையும் ஒன்றாக கொண்டாடுவோம். பிரதமர் மோடியிடம் இதுவரை நான் உதவியும் கேட்டதில்லை. அகமதாபாத்தில் தங்கி இருந்தபோது நான் அவரை பார்த்ததும் இல்லை." என்றார்.












Click it and Unblock the Notifications