பலே காங்கிரஸ்.. வாக்குப் பதிவின்போதே ரூ. 5000 டோக்கன் விநியோகம்.. புதுவையில் பரபரப்பு
புதுச்சேரி: தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதே காங்கிரஸ் கட்சியினர் 5000 ரூபாய் டோக்கன் விநியோகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எதிர்கட்சிகள் சாலை மறியலில் குதித்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது.

இந்த நிலையில் சாமிபிள்ளைதோட்டம் பகுதியில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்க்கு காங்கிரஸ் கட்சியினர் 5000 ரூபாய்க்கான டோக்கன் கொடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பம் பகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், காமராஜ் நகர் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து 5000 ரூபாய் டோக்கன் வழங்கியதாக எதிர்கட்சிகள் புகாரையடுத்து 4 பேர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காமராஜ் நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி மாநில தேர்தல் துறையின் இணையதளம் செயல்படவில்லை. இதனால் வாக்குப்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியாமல் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சிறமப்பட்டு வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான இணையதள லிங்க் கொடுக்கப்பட்டிருந்தும், அந்த இணையதளம் பயன்பாட்டில் இல்லை என பதிவு வருகிறது.












Click it and Unblock the Notifications