பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவால் அதிக பாதிப்பு.. ஆய்வில் பகீர் தகவல்
புதுவை: பார்வையற்றோர், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்க இதழ் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டது.
கொரோனா வைரஸ் தொற்று 2ஆவது அலை தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பார்வையற்றோர், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்க இதழ் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.
இதனடிப்படையில் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனையும் கள ஆய்வு செய்தது. ஆய்வு முடிவுகளை வெளியிட்ட அண்ணாமலை உடையப்பன் கூறுகையில் 232 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. பார்வையற்றோர், அதிக பார்வை குறைபாடு, குறைந்த பார்வை குறைபாடு, பார்வை குறைபாடே இல்லாதவர்கள் என பல பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டது.
பார்வை குறைபாடு கவலை, மனசோர்வுடன் தொடர்புடையது. இவ்வாறு உள்ளவர்கள் கொரோனாவால் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் மோசமான விளைவுகளால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது தெரியவந்தது.
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று அதிக ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இவர்கள் தாங்களாக சென்று மருத்துவரை அணுகுவதும் குறைவாகவே உள்ளது. பார்வை குறைபாடு உள்ளவர்கள் தங்கள் வருவாய் ஆதாரமான வேலைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
வீடியோ கான்பிரன்சிங், வீடியோ காட்சிகளை காண முடியாதது பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மிகுந்த சவாலாக உள்ளது என அவர் தெரிவித்தார்.