தனபாலை முதல்வராக்க திட்டம் போட்டேன்.. தலித் எம்எல்ஏக்களே எதிராக இருந்தாங்க! ரகசியம் உடைத்த திவாகரன்
புதுக்கோட்டை: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு சபாநாயகராக இருந்த தனபாலை முதல்வராக ஆக்கலாம் என்று முன்மொழிந்ததாகவும், ஆனால் அதிமுகவில் இருந்த 35 பட்டியலின எம்எல்ஏக்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என கூறியுள்ளார் சசிகலாவின் உறவினரான திவாகரன்.
புதுக்கோட்டையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அதிமுகவும், பாஜகவும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். வார்த்தை போரை தவிர்க்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு சரியாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், சட்டம் ஒழுங்கு பிரச்னையில் திமுக அரசு மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக அரசியலில் தனி மனித தரமற்ற விமர்சனங்கள் செய்யப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் அனைவரிடமும் சுமூகமாக இருக்க வேண்டும். ஒன்றிய அரசு என்று சொல்வது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அதனால் தான் தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி போன்ற இயற்கை பேரிடருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
மத்திய அரசுடன் 24 மணி நேரமும் திமுக மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதால் தான் தமிழகத்துக்கு நிதிகள் வருவதில்லை. மோதல் போக்கை கைவிட்டு நிர்வாக ரீதியாக சுமூகமான முறையை மாநில அரசு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மோதல்போக்கால் பாதிக்கப்படுவது மக்கள் தான். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியால் தன்னைப் போன்ற கல்வியாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு புதிய முதல்வரை தேர்தெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போது டிடிவி தினகரன் பிரச்சினை செய்த போது, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு சபாநாயகராக இருந்த தனபாலை முதல்வராக ஆக்கலாம் என்றுதான் சசிகலாவிடம் கூறி முன்மொழிந்தேன். அதை திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால் எங்கள் கட்சியில் இருந்த 35 பட்டியலின எம்எல்ஏக்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்குள் பழனிசாமியை உள்ளடக்கிய அதிமுக ஒருங்கிணைப்பு நடந்துவிடும். பழனிசாமிக்கு அட்வைஸ் செய்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அவர் என்னை விட மூத்தவர். மத்திய அரசுடன் 24 மணி நேரமும் திமுக மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதால் தான் தமிழகத்துக்கு நிதிகள் வருவதில்லை. மோதல் போக்கை கைவிட்டு நிர்வாக ரீதியாக சுமுகமான முறையை மாநில அரசு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications