திமுக இளைஞரணி அமைப்பாளர் திடீர் ராஜினாமா.. அப்செட்டில் ஸ்டாலின்.. மூத்த எம்.பியை அனுப்ப திட்டம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக இருக்கிறது தி.மு.க. இந்நிலையில், அந்தக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளரான முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் ரங்கசாமி - பா.ஜ.க கூட்டணிக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், தி.மு.கவில் ஏற்பட்டுள்ள பூசல், புதுச்சேரி தி.மு.கவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க இளைஞரணி அமைப்பாளரான முகமது யூனுஸ், தி.மு.க புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா மீது குற்றம்சாட்டிவிட்டு ராஜினாமா செய்திருப்பது உடன்பிறப்புகள் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

திடீர் ராஜினாமா
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி சுல்தான்பேட்டை பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ், புதுச்சேரியில் தான் வகித்து வந்த மாநில இளைஞரணி அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், கனத்த இதயத்தோடு தி.மு.கவிலிருந்து வெளியேறுவதாகவும் அறிவித்தார்.

சிவா தான் காரணம்
தி.மு.க மாநில அமைப்பாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் இரா.சிவா தன்னை ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியுள்ளார் என்றும் முகமது யூனுஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தி.மு.க-வைச் சேர்ந்தவன் நான். அதனால் தன்மானமும், சுயமரியாதையும் அதிகம். அந்த சுயமரியாதை கெடுகின்றபோதும், தன்மானத்திற்கு இழுக்கு வருகின்றபோதும் கட்சிக்காக எவ்வளவு விட்டுக்கொடுத்துப் போனாலும் எங்களை மேலும் மேலும் கேவலப்படுத்துகிறார்கள் என்றும் முகமது யூனுஸ் கூறியுள்ளார்.

தொகுதியையே விட்டுக்கொடுத்தேன்
மேலும், அவர் கூறுகையில், நான் தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து வில்லியனூர் தொகுதியில் கடுமையாகச் செலவழித்து மக்கள் நலப் பணிகளைச் செய்து வந்தேன். சிவா கேட்டதற்காக தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு, அவரது வெற்றிக்காகப் பாடுபட்டேன்.
சிவா சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின்பு இஸ்லாமிய மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். தேர்தலின்போது இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற்ற அவர், ரம்ஜான் பண்டிகைக்காக ஒரு இப்தார் நோன்பு நிகழ்ச்சி கூட நடத்தவில்லை." என்றார்.

31 ஆண்டுகளாக கட்சியில்
1991-ஆம் ஆண்டு முதல் திமுகவில் கட்சி பணியாற்றி வருகிறேன். சுமார் 30 ஆண்டுகாலம் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் செயலாளர் ஆகியோரின் செயல்படி நடந்து கொண்டேன். 2012-ஆம் ஆண்டு முதல் மாநில இளைஞரணி அமைப்பாளராக பதவியேற்றேன். கட்சியில் தொடர்ந்து பணியாற்றுவதற்கு தனது பொருளாதாரத்தை இழந்து உள்ளேன்.
கனத்த இதயத்தோடு தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ளேன். மேலும், தனது மக்கள் சேவை தொடரும். அடுத்தக் கட்ட முடிவுகள் பற்றி ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் அறிவிக்கப்படும் என்று முகமது யூனுஸ் தெரிவித்தார்.

புதுச்சேரி பூசல்
புதுச்சேரி மாநில நிர்வாகிகளை கவனிப்பதில் தி.மு.க தலைவர் சரிவர கவனம் செலுத்துவதில்லை என்றும் புகார்கள், கோரிக்கைகள் தெரிவித்தால் கூட கண்டுகொள்வதில்லை என்றும் அக்கட்சியினர் புலம்புகின்றனர்.
தலைமை கண்டுகொள்ளாததால், மாநில அமைப்பாளர் சிவா, தன் போக்கில் நடந்துகொள்வதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தி.மு.கவுக்கு கிடைத்தும் கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

விரைவில் சந்திப்பு
ரம்ஜான் பண்டிகை அன்று இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மூத்த நிர்வாகி ராஜினாமா செய்துள்ளது புதுச்சேரி தி.மு.கவில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இரா.சிவாவிடம் பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு கூறியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தி.மு.கவின் மூத்த எம்.பி ஒருவரை புதுச்சேரிக்கு அனுப்பி இந்த விவகாரத்தில் தலையிட்டு, தொண்டர்கள், நிர்வாகிகளை சமாதானப் படுத்தவும் முயற்சிகள் நடக்கிறதாம்.












Click it and Unblock the Notifications