சாக்கடையில் விழுந்த புள்ளிமான்.. 2 மணி நேர போராட்டம்.. சிகிச்சைக்குப் பின் துள்ளி ஓடியது!
புதுச்சேரி: புதுச்சேரியில் சாக்கடையில் விழுந்த புள்ளிமானை வனத்துறையினர் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போராடி உயிருடன் மீட்டனர். இதனையடுத்து கால்நடை மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு மான் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

புதுச்சேரியில் இருந்து வில்லியனூர் செல்லும் சாலையில் உள்ள மூலகுளம் பகுதியில் பெரிய கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாயில் சாக்கடை நீர் ஓடுகிறது. இந்தநிலையில் இந்த பகுதியில் தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் ஒன்று, சாக்கடை கால்வாயில் தவறி விழுந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள உடனே புதுச்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனக்காப்பாளர் சத்தியமூர்த்தி உத்தரவின்பேரில், வனத்துறை வேளாண் அதிகாரி தியாகராஜன் தலைமையில் ஊழியர்கள் கண்ணதாசன், சீனிவாசன், சக்திவேல், நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் சாக்கடையில் கால்வாயினுள் இறங்கி, அதனுள் விழுந்த புள்ளிமானை சுமார் ஒரு இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போராடி உயிருடன் மீட்டனர். பின்னர் புள்ளிமானை வனத்துறைக்கு கொண்டு வந்த அவர்கள் கால்நடை மருத்துவரைக் கொண்டு சிகிச்சை அளித்து, அங்குள்ள வனப்பகுதிக்குள் விட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் மரங்கள், செடிகொடிகள் நிறைந்த ஒரு பகுதியில் மான்கள் சில உள்ளன. தற்போது அவற்றில் ஒன்று தண்ணீர் தேடி ஊருக்குள் வந்துள்ளது.

அவ்வாறு வரும்போது தான் புள்ளிமான் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்துள்ளது. தண்ணீர் தேடி வன விலங்குகள் ஊருக்குள் வந்தால் பொதுமக்கள் அவற்றை துன்புறுத்த வேண்டாம். அது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.













Click it and Unblock the Notifications