கோதாவரி ஆற்றில் மீண்டும் வெள்ளபெருக்கு - தண்ணீரில் தத்தளிக்கும் ஏனாம் மக்கள்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் மழை இல்லாத போதிலும், கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் ஏற்படும் வெள்ளம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியத்தை நோக்கி வந்து கடலில் கலக்கிறது. ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் ஏனாம் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால், ஏனாம் பகுதியில், ஆற்றங்கரையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களில் கடந்த ஜூலை மாதம் முதல் பெய்த கனமழையால் கிழக்கு கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏனாம் பிராந்தியம் தண்ணீரால் சூழப்பட்டது. இந்த மாநிலங்களில் மழை நின்ற நிலையில், ஏனாம் பிராந்தியத்திலும் வெள்ளம் வடிந்து, சகஜ நிலைக்கு திரும்பியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மீண்டும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால், கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோதாவரி ஆற்றில் கடைமடையில் உள்ள ஏனாமில் தற்போது மழையில்லை என்றாலும், கோதாவரி ஆற்று வெள்ளம், ஏனாம் பிராந்திய நகருக்குள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் மக்கள் வெளி வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அவசர தேவைக்குக்கூட படகில் தான் செல்ல வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
5 வது நாளாக இன்றும் வெள்ள பெருக்கு அதிகரித்து காணப்படுவதால், பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஏனாமின் தாழ்வான பகுதிகளான பாலயோகி நகர், அய்யன்னா நகர், பரம்பேட்டா, குரு கிருஷ்ணாபுரம், கோன வெங்கட்டரத்னம் நகர், பிரான்ஸ்டிப்பா, ஓல்டு ராஜுவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மக்கள் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு படகுகள் மூலம் உணவுப் பொட்டலங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் முதியோர் இல்லம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் மழை நின்று, கிழக்கு கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு எப்போது குறையும் என ஏனாம் பிராந்திய மக்கள் கவலையுடன் இருந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications