புதுச்சேரி அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு இனி வாரம் 3 முட்டை... ஆளுநர் தமிழிசை அதிரடி அறிவிப்பு!
புதுச்சேரி: புதுவையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் வாரம் 3 முட்டை வழங்க மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அதிரடியாக உத்தரவிட்டார்.
பாஜக சதி செய்து ஆட்சியை கவிழ்த்து விட்டு, ஆளுநர் மூலம் திட்டங்ளையே அறிவித்து மக்களை ஏமாற்றி வாக்குகளை கவர திட்டமிட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினார்கள்.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவே திரும்பி பார்க்கும் புதுவை
கடந்த சில நாட்களாக ஒட்டுமொத்த இந்தியாவே உற்று நோக்கும் மாநிலமாக புதுச்சேரி உருவாகி விட்டது. புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், முதல்வராக இருந்த நாராயணசாமிக்கும் சுத்தமாக ஒத்துப் போகவில்லை. இதனால் நாராயணசாமி பல கட்ட போராட்டம், குடியரசு தலைவரிடம் மனு அளித்ததன் பயனாக கிரண் பேடி துணை நிலை ஆளுர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது
அதன்பிறகு புதிய துணை நிலை ஆளுநராக வந்தார் தமிழக மக்களால் நன்கு அறியப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன். ஏற்கனவே தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை, புதுவை ஆளுநர் பதவியை கூடுதலாக நிர்வகிப்பார். இதற்கிடையே காங்கிரசில் இருந்து அடுத்தடுத்து பல எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சி நாற்காலி ஆட்டம் கண்டதால் பெரும்பாண்மையை நிரூபிக்க முடியாது என்பதால் முதல்வர் நாராயணசாமியும் ராஜினாமா செய்தார்.
புதிய ஆளுநர் தமிழிசை அதிரடி
இதன்பின்பு ஆட்சி கலைந்ததால் புதிய ஆளுநர் தமிழிசை, புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளார்.இந்த நிலையில் புதிய ஆளுநர் தமிழிசை, புதுவையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் வாரம் 3 முட்டை வழங்க அதிரடியாக உத்தரவிட்டார்.
அங்கன்வாடியில் இனி வாரம் 3 முட்டை
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் நிதி உதவியுடன் புதுச்சேரி மாநிலத்திலுள்ள 855 அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்பட்டு வருகிறது. அக்குழந்தைகளின் புரதச்சத்தின் தேவையை உணர்ந்து வாரந்தோறும் ஒரு முட்டை வீதம் வழங்கப்படுவதை உயர்த்தி வாரம் மூன்று முட்டைகள் வீதம் வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அரசுத்துறைக்கு அறிவுறுத்தினார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
அதற்கான செலவினங்களுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால் 29.846 குழந்தைகள் பயன்பெறுவர் ஆண்டொன்றுக்கு சுமார் ரூ. 1.18 கோடி கூடுதல் செலவாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புதுவையில் பாஜக சதி செய்து ஆட்சியை கவிழ்த்து விட்டு, ஆளுநர் மூலம் திட்டங்ளையே அறிவித்து மக்களை ஏமாற்றி வாக்குகளை கவர திட்டமிட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினார்கள்.