ராஜ்யசபா சீட் தரலைன்னா திமுகவின் ஜெகத்ரட்சகன் வாரிசுக்கு ஓட்டு- ரங்கசாமியை மிரட்டி சாதித்த பா.ஜ.க!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு ராஜ்யசபா சீட்டை பாஜகவுக்கு முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி ஏன் விட்டுக் கொடுத்தார் என்கிற சுவாரசியமான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவின் புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த கோகுலகிருஷ்ணனின் பதவிக் காலம் முடிவடைந்தது. இதனையடுத்து புதுச்சேரி ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்த ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக முதலில் களமிறங்கியது பா.ஜ.க. முதல்வர் ரங்கசாமியிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது பாஜக. இதனைப் பார்த்த அதிமுகவும் கோதாவில் குதித்தது.

ரங்கசாமியின் தயக்கம்
ரங்கசாமியைப் பொறுத்தவரையில் சபாநாயகர், அமைச்சர் பதவி, நியமன எம்.எல்.ஏக்கள் என அத்தனையிலும் பாஜகவுக்கு விட்டுக் கொடுத்தோம். இப்போது ராஜ்யசபா சீட்டுக்கும் விட்டுக் கொடுக்க வேண்டுமா? என ஆதங்கப்பட்டார். இதுதான் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக இருந்தது.

பாஜகவுக்கு விட்டு கொடுப்பு
ஆனால் கடைசி நேரத்தில் திடீரென பாஜகவுக்கு ரங்கசாமி விட்டுக் கொடுத்தார். பாஜகவின் செல்வகணபதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். முதல்வர் ரங்கசாமி திடீரென பாஜகவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நெருக்கடி ஏன் ஏற்பட்டது? என்பது குறித்து நாம் விசாரித்தபோதும் அந்த சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன.

மீண்டும் ஜெகத்ரட்சகன்
ராஜ்யசபா சீட்டுக்காக பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக முட்டி மோதிக் கொண்டிருந்தன. அப்போது திமுகவின் லோக்சபா எம்.பி.யான ஜெகத்ரட்சகன் ஒரு கணக்குப் போட்டு புதுச்சேரி அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைகளை தொடங்கினார். ஏற்கனவே புதுச்சேரியில் திமுகவின் முதல்வர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்தி அதகளப்படுத்தியவர்தான் ஜெகத்ரட்சகன். அப்போது ஜெகத்தை சுற்றி சர்ச்சைகள் ஏகமாக வெடித்தன.

பாஜக தயவுடன் வாரிசுக்கு எம்பி பதவி
ஆனாலும் புதுச்சேரி அரசியலில் தமக்கு ஒருபிடி இருக்க வேண்டும் என்பது ஜெகத்ரட்சகனின் தீராத தாகம். அதனால் வாரிசை ராஜ்யசபா எம்.பி.யாக்க ஒரு வியூகம் வகுத்தார். புதுச்சேரி சட்டசபையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜகவின் பலம் 19 எம்.எல்.ஏக்கள். திமுக-காங்கிரஸ்-சுயேட்சைகளின் பலம் 14 எம்.எல்.ஏக்கள். ராஜ்யசபா சீட்டை பாஜகவுக்கு தராமல் ரங்கசாமி மறுத்தால் அந்த கட்சியின் எம்.எல்.ஏக்களை வளைத்து வாரிசை எம்.பி.யாக்கிவிடலாம் என்பதுதான் ஜெகத்ரட்சகன் போட்ட கணக்கு.

பாஜகவின் மிரட்டல்
ராஜ்யசபா சீட்டை தங்களுக்கு தராமல் அடம்பிடித்துக் கொண்டிருந்த ரங்கசாமியிடமும் ஜெகத்ரட்சகன் போட்டு வைத்திருக்கும் கணக்கையும் போட்டுக் கொடுத்தது பாஜக. அதாவது எங்களுக்கு சீட் தரலைன்னா நாங்க திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் வாரிசை ஆதரிக்கவும் தயார்.. உங்க வேட்பாளர் தோற்றுப் போவார்.. பெரிய அவமானமாகிடும்.. அரசாங்கத்துக்கே ஆபத்து வந்துவிடும் என்பதுதான் பாஜகவின் சாப்ட் மிரட்டலாக இருந்திருக்கிறது.

ஆடிப் போன ரங்கசாமி
இதற்குப் பிறகுதான் ரங்கசாமியிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. புதுச்சேரி அரசியலில் நிரந்தரம் என்பது எதுவுமே இல்லை என்பது ரங்கசாமிக்கும் தெரியும். பாஜகவை மீறி ஒரு வேட்பாளரை நிறுத்தப் போய் தேர்தலின் போது எம்.எல்.ஏக்கள் மாற்றி ஓட்டுப் போட்டால் கேவலமாகிவிடுமே என ரங்கசாமியும் மிரண்டுதான் போனாராம். இதனையடுத்தே வேறுவழியே இல்லாமல் பா.ஜ.க.வுக்கே ராஜ்யசபா சீட்டை கொடுத்துவிட்டாராம் ரங்கசாமி. புதுச்சேரி அரசியலில் இதுதான் இப்போதைக்கு ஹாட் டாபிக்.












Click it and Unblock the Notifications