எனக்கு ஒரு கோப்பு கூட வருவதில்லை.. எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க.. கிரண் பேடி வருத்தம்
புதுச்சேரி: எனக்கு எந்த அரசுக் கோப்பும் வருவதில்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் அமைச்சரவைக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகார மோதல் இருந்து வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதனிடையே புதுச்சேரி மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடுவதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என்றும், அவர் அமைச்சரவையின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும், மேலும் கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த சிறப்பு அதிகாரத்தையும் ரத்து செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை கேட்டும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்ற மறுத்ததோடு மட்டுமல்லாமல், இந்த வழக்கை அவசர வழக்காகவும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது கிரண்பேடிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கிரண்பேடி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும். அதை மீறிச் செயல்பட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று தலைமைச் செயலர் உள்ளிட்ட அனைத்துத் துறைச் செயலர்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்தைச் செய்தியாளர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய கிரண்பேடி கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், நிர்வாகம் என்பது மக்களுக்கானது. கடந்த சில நாள்களாக அரசின் எந்த ஒரு கோப்பும் ஆளுநர் மாளிகைக்கு வரவில்லை. புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மற்றும் நிர்வாகி என்ற முறையில் இதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எனது கடமை. யூனியன் பிரதேசத்தின் சட்ட விதிகள், வணிக விதிகள் மற்றும் நிதி விதிகளில் எந்த ஒரு மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.













Click it and Unblock the Notifications