புதுச்சேரி அரசு கவிழ நாராயணசாமிதான் காரணம்.. மக்களுக்கு அவர் என்ன செய்தார்? ரங்கசாமி கேள்வி
புதுச்சேரி: நாராயணசாமி அரசு சரியாக செயல்படவில்லை என்பதே ஆட்சி கவிழ காரணம் என்று, என்.ஆர்.ரங்கசாமி குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியால் தங்கள் எம்எல்ஏக்களை கூட தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், இன்று பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி வெற்றி பெற முடியவில்லை. எனவே ஆட்சி கலைந்தது. இதன்பிறகு பேரவை வெளியே ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், உங்கள் ஆட்சி காலத்தில் புதுச்சேரி மக்களுக்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்தீர்கள். புதிதாக என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள். நாங்கள் கட்டிய பாலத்தை நாராயணசாமி ஆட்சியில் துவங்கி வைத்தார்.
மாணவர்களுக்கு மதிய உணவு கொடுப்பதாக சொன்னீர்கள், அதை கொடுக்கவில்லை. லேப்டாப், சைக்கிள் போன்றவற்றை மாணவர்களுக்கு வழங்குவதாக கூறினீர்களே, அதையும் செய்யவில்லையே.
காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கே தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கவில்லை. எனவேதான், அவர்கள் கட்சி எம்எல்ஏக்களே அவரை புறக்கணித்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் ஆட்சி கலைந்தது. இவ்வாறு ரங்கசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications