கொரோனாவுக்காக பெட்ரோல் 77 பைசா.. டீசல் விலை 55 பைசா உயர்வு.. புதுச்சேரியில்!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பு செலவினங்களுக்காக, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விற்பனை வரி 1 சதவீதம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, பெட்ரோல் லிட்டர் 77 பைசாவும், டீசல் லிட்டர் 55 பைசாவும் இன்று முதல் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசால் 5 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், பொதுமக்களுக்கு முக கவசம், நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றிற்காக புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் ரூபாய் 995 கோடி நிதி கேட்டிருந்தது.

ஆனால் மத்திய அரசு முதற்கட்ட நிதியை கூட இதுவரை வழங்கவில்லை. மேலும் மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கியுள்ளது. மது விற்பனை, சுற்றுலா, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மூலம் கிடைத்து வந்த வருவாய் தடைபட்டுள்ளதால் கடும் நிதி நெருக்கடியில் புதுச்சேரி அரசு சிக்கித்தவிக்கின்றது.

இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசின் வரி உயர்த்தப்படுவதாக கடந்த 7 ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி உயர்த்தபட்ட வரியின்படி பெட்ரோல், டீசல் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல் லிட்டர் 77 பைசா உயர்த்தபட்டு ரூபாய் 69.39 க்கும், டீசல் லிட்டர் 55 பைசா உயர்த்தபட்டு ரூபாய் 65.16 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் 200 க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அருண், புதுச்சேரியில் இதுவரை 6 பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளார். இதனால் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். மேலும் 4,555 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும் பேசிய அவர், கடந்த 17 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,667 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சாலைகளில் அத்தியாவசிய தேவையின்றி சுற்றி திரிந்த 703 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications