லாக்டவுன் நேரத்தில் இரு ஹீரோக்கள்.. கர்ப்பிணிக்கு ஆட்டோ கொடுத்த ஓனர்.. டிரைவராக மாறிய போலீஸ்காரர்!
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்காக ஒரு போலீஸ்காரர் ஆட்டோ டிரைவராக மாறிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. போலீஸாரும் பிற துறையினரும் மக்களுக்காக பல்வேறு வகையில் சேவையாற்றி வருகின்றனர். போலீஸார் வெளியில் வருவோரை அடிக்கிறார்கள், பிடிக்கிறார்கள் என சர்ச்சைகளும் வெடித்தபடி உள்ளன.
ஆனாலும் கொரோனாவைரஸ் பரவலைத் தடுக்க போலீஸார் வேறு வழியே இல்லாமல் சில நேரம் இப்படி நடந்து விட நேரிடுகிறது. அதேசமயம், அவர்களுக்குள்ளும் மனிதாபிமானம், மனித நேயம் இருப்பதை பல சம்பவங்கள் வெளிக்காட்டியபடி உள்ளன.

மக்கள்
பல ஊர்களில் போலீஸார் மக்களுக்கு உதவும் செயல்கள் குறித்த செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஏதோ ஒரு ஊரில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்ல ஆள் இல்லாமல் போலீஸாரே சேர்ந்து தூக்கிக் கொண்டு போய் இடுகாட்டில் சேர்த்த படமும் செய்தியும் வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்தது. இப்போது அப்படிப்பட்ட இன்னொரு உணர்வுச் சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.

காவலர்
புதுச்சேரியில் ஆயுதப் படை காவலராக உள்ளவர் கருணாகரன். இவர் தமிழக எல்லையில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் பணியில் இருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏப்ரல் 13-ஆம் தேதி பிரசவ வலியால் துடித்தார். அப்போது அவரை அவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனத்தை தேடினார். லாக்டவுனால் ஆட்டோக்கள் ஏதும் இல்லை.

வண்டி ஓட்டத் தெரியாது
ஒரு ஆட்டோ உரிமையாளர் தனது ஆட்டோவை கொடுத்தார். ஆனால் அவருக்கு வண்டி ஓட்டத் தெரியாது. இதையடுத்து கருணாகரன் அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்து ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அந்த இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள மருத்துவமனைக்கு அந்த பெண்ணை பெற்றோரிடம் அழைத்து சென்றார். அங்கு அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

போலீஸ்
இந்த சம்பவம் புதுச்சேரி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆட்டோ ஓட்டுநர் என்றால் ஒரு பார்வையும், போலீஸார் என்றால் ஒரு பார்வையும் இருந்த நிலையில் இந்த இருவரும் அதை துடைத்துப் போட்டுள்ளனர். நாங்கள் இருப்பது மக்களுக்காக என்பதைக் காட்டியுள்ளனர். ஒரே சமயத்தில் இரு தரப்பினரும் மக்கள் மத்தியில் ஹீரோக்களாக மாறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications