வாட்ஸ் அப்பில் அரைகுறை ஆடையில் வந்த பெண்.. மிரட்டப்பட்ட பாஜக தலைவர்.. என்ன நடந்தது?
புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதனை வாட்ஸ் அப் வீடியோ காலில் ஒரு கும்பல் மிரட்டி உள்ளது. அவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டி மிரட்டிய அந்த கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி மாநில பாஜக தலைவராக உள்ளவர் சாமிநாதன். இவருக்கு தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் வீடியோ கால் வந்துள்ளது. அதனை அவர் தொடர்பு கொண்டு பேசிய போது, மறுமுனையில், அறைகுறை ஆடையுடன் ஒரு பெண் பேசவே... அதிர்ச்சி அடைந்த அவர், செல்போன் தொடர்பை துண்டித்தார்.

பின்னர் மற்றொரு தொலைப்பேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர், 50 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் மறுப்பு தெரிவித்தால், செல்போனில் பெண்ணிடம் பேசிய வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என்று மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன், உடனடியாக புதுச்சேரி சைபர் கிரைமில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மர்ம நபர் தொடர்பு கொண்டது தெரியவந்தது.
ஏற்கனவே இதேபோன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் பெரியகுளம் எம்எல்ஏ சரவணனுக்கு நடந்துள்ளது. அந்த சம்பவத்திலும் குற்றவாளிகள் ராஜஸ்தானில் இருந்துதான் அழைத்திருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். பெரியகுளம் எம்எல்ஏ சரவணனுக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக திமுகவைச் சேர்ந்த சரவணக்குமார் (வயது 48) இருக்கிறார். இவரது செல்போனுக்கு கடந்த ஜூலை 1ம் தேதி 'வாட்ஸ்-அப்' வீடியோ கால் வந்திருக்கிறது. தொகுதியில் உள்ள மக்கள் யாரோ அழைக்கிறார்களோ, புதிய எண்ணாக இருக்கிறதே என்று நினைத்து அழைப்பு ஏற்றுள்ளார் எம்எல்ஏ சரவணக்குமார். ஆனால் வீடியோ காலில் எதிர்முனையில் யாரும் பேசாததால் அந்த அழைப்பை அவர் துண்டித்தார்.
சிறிது நேரத்தில், அவருடைய செல்போன் எண்ணுக்கு, எம்.எல்.ஏ. வீடியோ காலில் ஒரு பெண்ணுடன் பேசுவது போன்றும், எதிர்முனையில் அந்த பெண் நிர்வாணமாக இருப்பது போன்றும் மார்பிங் செய்யப்பட்ட ஒரு வீடியோ வந்திருக்கிறது. அதைப் பார்த்து பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.
இதனிடையே சரவணக்குமார் எம்எல்ஏவை தொடர்பு கொண்டு சிலர் பணம் கேட்டு மிரட்டினார்கள். இதையடுத்து கடந்த 3-ந்தேதி ரூ.5 ஆயிரம், 8-ந்தேதி ரூ.5 ஆயிரம் என ரூ.10 ஆயிரம் அனுப்பிய உள்ளார். மீண்டும் அவர்கள் பணம் கேட்டு மிரட்டினர். இதையடுத்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம், சரவணக்குமார் நடந்த விவரங்களை முழுமையாக கூறிபுகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க தேனி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகிக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் கடந்த 10-ந்தேதி வழக்குப்பதிவு குற்றவாளிகள் எங்கிருந்து அழைத்தார்கள் என்பதை வாட்ஸ் அப் அழைப்பை வைத்து விசாரித்தனர். மேலும் கூகுள் பே கணக்கு மூலம் பணம் அனுப்பிய கணக்கையும் கண்டுபிடித்தார்கள்.
அதன்படி அந்த செல்போன் எண் மேகாலயா மாநிலத்தில் வாங்கப்பட்டதும், வங்கிக்கணக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மார்பிங் சதிதிட்டத்தை நடத்துபவர்கள், இந்த வேலையை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தேனி சைபர்கிரைம்இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் ராஜஸ்தான் விரைந்தனர். அங்கு உள்ளூர் போலீசார் உதவியுடன் மோசடி கும்பலை சுற்றி வளைத்தனர். ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியை அடுத்த கோவிந்த்கர்க் என்ற ஊரில் பதுங்கி இருந்த குற்றவாளிகளை கைது செய்தனர். அங்கிருந்த அர்ஷத்கான் (38) உள்பட 3 பேரை பிடித்தனர். இதில் 2 பேர் சிறுவர்கள். இவர்கள் 3 பேர் உள்பட சிலர் கூட்டுச் சேர்ந்து எம்.எல்.ஏ.வுக்கு வீடியோ கால் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து, பின்னர் மார்பிங் செய்து பணம் பறித்தது உறுதியானது. அவர்களை கைது செய்து தேனி அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications