வெல்கம் டூ தட்டாஞ்சாவடி: இப்படித்தான் வரணும்... வேட்பாளர்களை வரவேற்கும் புதுச்சேரி!
புதுச்சேரி: புதுச்சேரி மக்களவை தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
தமிழகத்தோடு சேர்த்து புதுச்சேரி மக்களவை தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ம் தேதியே புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இரண்டு தேர்தலுக்கும் இன்று முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ளது.
மச்சானை பார்ப்பாரா? கட்சியை பார்ப்பாரா?.. தர்மசங்கட தர்மயுத்தத்தில் சீமான்!
புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அருணிடம் இன்று முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். இதேபோல் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுவோர் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இதற்காக தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
[குற்றப் பின்னணி கொண்ட எம்.பிக்கள்.. ஒரு விறுவிறு தகவல் தொகுப்பு]
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர், 3 கார்களில் தான் வரவேண்டும். அதிகபட்சமாக வேட்பாளருடன் 5 பேர் வரை வரலாம். கார்களை தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்த வேண்டும். மனு தாக்கல் செய்யும் அறைக்குள் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 26 ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் தேர்தல் அலுவலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மக்களவை தொகுதியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் போட்டியாகும்.. இன்னும் இருகட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இதனிடையே தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக போட்டியிடுகிறது. திமுக சார்பில் தொழிலதிபர் வெங்கடேசன் போட்டியிட உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் இதுவரை அறிவிக்கவிக்கவில்லை. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபின் புதுச்சேரியில் தேர்தல் களம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.