மே 17 க்கு பிறகு ஊரடங்கு நீடித்தால் புதுச்சேரி பொருளாதாரம் அழிந்துவிடும்.. நாராயணசாமி எச்சரிக்கை
புதுச்சேரி: மே 17 க்கு பிறகு ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்துவிடும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு நீட்டிக்கும் முடிவை மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் 3 பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்பேடு சந்தைக்கு சென்ற ஒருவர் புதுச்சேரியில் தங்கி 10 க்கும் மேற்பட்ட கடை வியாபாரிகளுக்கு பழங்கள் விநியோகம் செய்துள்ளார். அவருக்கு தேனி மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா அறிகுறி இருந்தது தெரியவந்துள்ளது.
ஆகவே அவருடன் தொடர்பில் இருந்த 36 பேருக்கும், புதுச்சேரியின் பல பகுதிகளில் இருந்த 12 பேருக்கும் உமிழ்நீர் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். இருந்தாலும் நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது.
பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆகவே நம்முடைய எல்லையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம். அதற்கு காவல்துறை, வருவாய்துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. மாநில அரசும் இப்போது தான் கடைகள், தொழிற்சாலைகளை திருந்துள்ளோம். மாநில வருவாய் குறைந்துள்ளது. ஆகவே மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டும், மத்திய அரசிடம் இருந்து எந்தவித உதவியும் கிடைக்கவில்லை.
இந்த தடை உத்தரவு எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பதும் தெரியவில்லை. மத்திய அரசு மே 17 க்கு பிறகு ஊரடங்கு உத்தரவை நீடிக்கும் என்றால் மாநிலத்தின் பொருளாதாரம் முழுமையாக அழிந்துவிடும். இது சம்மந்தமாக பிரதமர் முடிவெடுப்பதற்கு முன்பாக மாநில முதல்வர்களை கலந்தாலோசிக்க வேண்டும். அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்.
மத்திய அரசு பச்சை மண்டலம், ஆரஞ்சு மண்டலம், சிவப்பு மண்டலம் என்று அறிவித்துள்ளது. ஆனால் இதனை அறிவிப்பதற்கு முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசிக்கவில்லை. மாநில அரசுகளுக்குத்தான் எந்த பகுதி சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலமாக இருக்க வேண்டும் என்று தெரியும். எனவே மத்திய அரசு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலம் என்று அறிவிக்கும் சமையத்தில் மாநில அரசுகளின் பரிந்துரையை ஏற்று செயல்பட வேண்டும்.
மாநிலங்களுக்கு மட்டும் தான் எந்த பகுதியில் தொழிற்சாலைகள் திறக்கலாம், எந்தெந்த பகுதியை தனிமைப்படுத்தலாம் என்பது தெரியும். எனவே இது சம்மந்தமான முடிவையும் மாநிலங்களின் கையில் விட்டுவிட வேண்டும்.
கொரோனா தொற்றின் தாக்கம் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி நீடித்தால் அதுவரை நாம் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான விதிவிலக்கை அறிவிக்கின்றனர். சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும். சில மாநிலங்களில் குறைவாக இருக்கும். சில மாநிலங்களில் இருக்காது. எனவே இது குறித்த முடிவை மாநில அரசுகளே எடுத்துக்கொள்ள விட்டுவிட வேண்டும் என நாராயணசாமி தெரிவித்தார்.