பதற்றம்.. முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை.. புதுச்சேரி விரைகிறது துணை ராணுவம்
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு எதிரே முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ள நிலையில், மத்திய துணை ராணுவம் புதுச்சேரி விரைய உள்ளது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக உள்ளவர் கிரண்பேடி. இவர் முதல்வரை விட தனக்குத்தான் அதிகாரம் அதிகம் என்று கூறி அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பிப்ரவரி 11 முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார்.
ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். உடனே அபராதம் கூடாது என்று, முதல்வர் நாராயணசாமி கூறினார். ஆனால் ஆளுநர் இதை ஏற்கவில்லை. இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் போலீசாரிடம் பிடிபட்டு அபராதம் செலுத்தி வருகிறார்கள்.
கிரண்பேடியே சாலையில் இறங்கி, இதுபோன்ற சோதனைகளை நேரில் பார்வையிட்டார். முதல்வரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி, நாராயணசாமி அதிருப்தியடைந்தார். மேலும், மக்கள் நலத் திட்டங்களுக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாகவும், 30 நலத்திட்டங்களுக்கு கிரண்பேடி இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்பாதலும், நாராயணசாமி மேலும் கோபமடைந்தார்.
எனவே, அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
இதன்பிறகு, அக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, கருப்பு சட்டை அணிந்து, கொளுத்தும் வெயிலில், இன்று மதியம் 1 மணி முதல், ஆளுநர் மாளிகைக்கு எதிரே தர்ணாவில் குதித்தார் நாராயணசாமி. அமைச்சர்களும் முதல்வருடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக ஆளுநருக்கு எதிராக முதல்வர் தர்ணா நடத்தி வரும் சம்பவம் இன்று அரங்கேறியது.
முதல்வரே போராட்டம் நடத்தியதால், காவல்துறையினராலும் எதுவும் செய்ய முடியவில்லை. இன்று இரவு 7 மணியளவில், கிரண்பேடி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க, ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வர உள்ளார். எனவே, ஆளுநர் மாளிகையை காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கிரண்பேடி தகவல் அளித்துள்ளாராம். எனவே மத்திய துணை ராணுவத்தின் 2 கம்பெனி படைகள் நாளை காலை புதுச்சேரி விரைய உள்ளது. அவர்கள் கிரண்பேடிக்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர் என்று கூறப்படுகிறது. புதுச்சேரிக்கு துணை ராணுவப்படை விரைய உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications