சுதந்திர தினம்..! எல்லாரும் கட்டாயம் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்! சொல்கிறார் புதுவை முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட நாம் தாயாராகி வரும் நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா பிரிட்டன் நாட்டில் இருந்து சுதந்திரம் பெற்று இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை மத்திய அரசு கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோளகமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சுதந்திர தினம்
வரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அனைவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக தேசியக் கொடி சூரியன் அஸ்தமித்த பிறகு இறக்கப்பட வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், அதிலும் தேவையான திருத்தங்களை மத்திய அரசு இதற்காகக் கொண்டு வந்து இருந்தது.

ரங்கசாமி
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பல்வேறு அரசுகளும் தேவையான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைவரும் கட்டாயமாக மூன்று நாட்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்து உள்ளார்.

கொண்டாட்டம்
இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் மத்திய அரசு ஒரு திட்டத்தை முன்னெடுத்து உள்ளது. அதாவது 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தப் பள்ளி மாணவர்களால் மட்டுமே முடியும்.

கட்டாயம்
நமது நாட்டின் மீது நமக்கு இருக்கும் பற்று மற்றும் அக்கறையைக் காட்டும் வகையில் அனைவரும் மூன்று நாட்களும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். மாணவர்கள் எல்லாரும் தங்கள் பெற்றோரிடம் இது குறித்துக் கூற வேண்டும். பெற்றோர்களிடம் கூறி வரும் ஆகஸ்ட் 13, 14. 15 ஆகிய 3 நாட்களும் கட்டாயமாக வீட்டில் கொடியை ஏற்ற வேண்டும்.

கோலாகல திட்டம்
புதுச்சேரி அரசும் இங்குள்ள அனைத்து துறைகளின் மூலம் 75ஆவது சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம். நமது பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதை நாம் பாராட்ட வேண்டும். புதுச்சேரி அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications